பெங்களூருவில், பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு தீவைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

பெங்களூருவில், பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு தீவைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

in News / Local

பெங்களூருவில் பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு தீவைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் பின்வருமாறு:-

பெங்களூரு டி.தாசரஹள்ளி அருகே உள்ள மகேஸ்வரி நகரில் வசித்து வருபவர் சீனிவாஸ். பா.ஜனதா பிரமுகரான இவர் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மகன் சரத் (வயது 25). இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரத்துக்கு போன் செய்த மர்மநபர்கள் ‘ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். கேட்ட. பணம் கொடுக்காவிட்டால் உன்னை கடத்தி விடுவோம். வீட்டுக்கு தீவைப்போம்‘ என்று மிரட்டல் விடுத்தனர். இதை சரத் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் 1.30 மணிக்கு மர்மநபர்கள் சரத்தின் வீட்டுக்கு சென்றனர். அவர்கள் வீட்டு முன்பு வாகனம் நிறுத்தும் இடத்தில் பெட்ரோல் ஊற்றினர். அதன்பிறகு அவர்கள் தீவைத்துவிட்டு சென்றனர். இதனால் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தன.

இந்த நிலையில் கண்விழித்த சீனிவாஸ், சரத் ஆகியோர் மோட்டார் சைக்கிள்கள் மீது பிடித்த தீயை குடும்பத்தினருடன் சேர்ந்து அணைத்தனர். இதுகுறித்து பாகலகுண்டே போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டிற்கு தீ வைத்த மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர்.

இந்த நிலையில் அடுத்த சில மணிநேரங்களில் சரத்துக்கு போன் செய்த மர்மநபர்கள் ‘மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்தது ‘சாம்பிள்‘ தான். பணம் கொடுக்காவிட்டால் அலுவலகம் மற்றும் காருக்கு தீவைப்போம். குடும்பத்தை தீர்த்து கட்டுவோம்‘ என்று மீண்டும் மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி உடனடியாக சரத் தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் மிரட்டல் வந்த செல்போன் எண்ணையும் அவர் போலீசாரிடம் ஒப்படைத்தார். அதைவைத்து தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கினர்.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்தவர்கள் சோழதேவனஹள்ளி அருகே உள்ள ஆசார்யா கல்லூரி அருகே நிற்பது தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக தனிப்படையில் இடம் பெற்றிருந்த சோழதேவனஹள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்தவுடன் அங்கு இருந்த 2 பேர் ஓடினார்கள். அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். போலீஸ்காரர்களான சீனிவாஸ், மல்லிகார்ஜூன் ஆகியோர் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.

அப்போது கோபமடைந்த மர்மநபர்கள் கத்தியால் போலீஸ்காரர்கள் 2 பேரை தாக்கிவிட்டு ஓடினார்கள். இதனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசாமி வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டு சரண் அடையும்படி எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அவர்கள் சரண் அடைய மறுத்து, பிடிக்க செல்லும் போலீஸ்காரர்களை தாக்க முயன்றனர். இதனால் பாதுகாப்பு கருதி இன்ஸ்பெக்டர் சிவசாமி 2 பேரை நோக்கி அடுத்தடுத்து 2 முறை துப்பாக்கியால் சுட்டார். அப்போது துப்பாக்கி குண்டுகள் 2 பேரின் கால்களிலும் பாய்ந்தன. இதனால் அவர்கள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். உடனடியாக அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அதன்பிறகு அவர்கள் 2 பேரையும் போலீசார் விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் காயம் அடைந்த போலீஸ்காரர்கள் சீனிவாஸ், மல்லிகார்ஜூன் ஆகியோருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கைதான 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட நபர்களின் பெயர்கள் முகமது பாசீத் (23) மற்றும் முகமது ரியாஸ் (வயது 21) ஆகும். இவர்கள் 2 பேரும் தமிழ்நாடு திருநெல்வேலியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். பெங்களூரு மகேஸ்வரி நகரில் முகமது பாசீத்தும், பைலப்பா சர்க்கிளில் முகமது ரியாசும் தங்கியுள்ளனர். இவர்கள் 2 பேரும் அரிசி கடையில் வேலை செய்து வருகிறார்கள். ஏழை குடும்பத்தை சேர்ந்த 2 பேரும், லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடனை அடைக்க அவர்கள் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் அவர்கள் பணி செய்யும் கடையின் அருகே தான் சீனிவாசுக்கு சொந்தமான தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு சீனிவாசின் மகன் சரத் அடிக்கடி சொகுசு காரில் வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் சரத்தை கடத்தி பணம் பறிக்க அவர்கள் முடிவு செய்தனர். இதற்காக திட்டமிட்டு 2 முறை முயற்சி செய்தபோதிலும் சரத்தை அவர்களால் கடத்த முடியவில்லை. இதையடுத்து தான் அவர்கள் சரத்துக்கு போன் செய்து மிரட்டல் விடுத்து ரூ.50 லட்சம் கேட்டுள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top