கள்ளக்காதல் விவகாரம் :நாகர்கோவிலில் புகைப்படக்காரர் கொலையில் இலங்கை அகதி உள்பட 3 பேர் கைது!

கள்ளக்காதல் விவகாரம் :நாகர்கோவிலில் புகைப்படக்காரர் கொலையில் இலங்கை அகதி உள்பட 3 பேர் கைது!

in News / Local

நாகர்கோவிலை அடுத்த கரியமாணிக்கபுரம் பகுதியில், பழையாற்றையொட்டி உள்ள சுடுகாட்டின் தகனமேடையில் நேற்று முன்தினம் காலை ஆண் பிணம் ஒன்று பாதி எரிந்த நிலையில் கிடந்தது. தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அங்கு ஆண் ஒருவது உடல் பாதி எரிந்த நிலையில் இருந்தது. உடலில் ஆங்காங்கே கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோட்டார் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர்.

மேலும் இந்த வழக்கில் துப்புத்துலக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரணையில், சுடுகாட்டில் உடல் எரிக்கப்பட்டு கிடந்தவர் நெல்லை மாவட்டம் வள்ளியூர் காமராஜர் தெருவை சேர்ந்த ரெஜி (வயது 40), புகைப்படக்காரர் என்பதும் தெரிய வந்தது.

ரெஜி கடந்த 5-ந் தேதி மாலை கன்னியாகுமரி பெருமாள்புரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உறவினர் கேத்தீஸ்வரன் (26) என்பவரை பார்க்க சென்றுள்ளார். அப்போதுதான் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து நேற்று இரவு பெருமாள்புரம் அகதிகள் முகாமில் இருந்த கேத்தீஸ்வரனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ரெஜி கொலை செய்யப்பட்டது குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

ரெஜி இலங்கையைச் சேர்ந்தவர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தனது பெற்றோருடன் தமிழகத்துக்கு வந்துள்ளார். முதலில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சமூக ரெங்கபுரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தார் . கடந்த சில ஆண்டுகளாக ரெஜியும், அவருடைய அண்ணனும் வள்ளியூரில் தனியாக வசித்து வந்தனர். பெற்றோர் மட்டும் அகதிகள் முகாமில் வசித்து வருகிறார்கள்.

புகைப்படக்காரரான ரெஜி , ஆர்டரின்பேரில் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு புகைப்படம் எடுக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

கேத்தீஸ்வரனும் புகைப்படக்காரர் என்பதாலும், இருவரும் உறவினர்கள் என்பதாலும் ரெஜி, கேத்தீஸ்வரன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது கேத்தீஸ்வரனின் உறவுக்கார பெண்ணுக்கும், ரெஜிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இவர்களது கள்ளக்காதல் விவரம் கேத்தீஸ்வரனுக்கு தெரிய வந்தது.

அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை. எனவே அந்த பெண்ணுடனான பழக்கத்தை நிறுத்துமாறு கேத்தீஸ்வரன், ரெஜியை கண்டித்தார். ஆனாலும் ரெஜி அந்த பெண்ணுடனான தொடர்பை விடவில்லை. எனவே ரெஜியை தீர்த்துக்கட்டி விட கேத்தீஸ்வரன் முடிவு செய்தார். ரம்ஜான் பண்டிகை அன்று ரெஜியை கன்னியாகுமரிக்கு வருமாறு கேத்தீஸ்வரன் அழைத்துள்ளார். ரெஜி ஒரு காரில் கன்னியாகுமரிக்கு வந்தார். இருவரும் காரில் அமர்ந்து மது அருந்தினர்.

அப்போதும் தனது உறவுக் கார பெண்ணுடன் பழகுவதை நிறுத்திக்கொள் என்று ரெஜியிடம் கேத்தீஸ்வரன் கூறியுள்ளார். ரெஜி மறுக்கவே, இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கேத்தீஸ்வரன் தான் வைத்திருந்த கத்தியால் ரெஜியின் கழுத்து, முதுகு, கன்னம் போன்ற பகுதிகளில் சரமாரியாக குத்தியதாகவும், இதில் சம்பவ இடத்திலேயே ரெஜி ரத்த வெள்ளத்தில் பிணமானதாகவும் கூறப்படுகிறது.

பிணத்தை என்ன செய்வது? எனத் தெரியாமல் திகைத்த கேத்தீஸ்வரன், தன்னுடைய நண்பர்களான சுசீந்திரம் சன்னதி தெருவைச் சேர்ந்த பழனி (26), பரமார்த்தலிங்கபுரத்தைச் சேர்ந்த முகமது பைசல் (25) ஆகியோரை உதவிக்கு அழைத்துள்ளார்.

பின்னர் 3 பேரும் ஆலோசனை செய்து அதன்படி கரியமாணிக்கபுரம் சுடுகாட்டில் பிணத்தை எரிக்க முடிவு செய்தனர். ரெஜி வந்த காரிலேயே அவரது உடலை ஏற்றிக்கொண்டு கரியமாணிக்கபுரம் சுடுகாட்டுக்கு கொண்டு வந்தனர். அங்கு தகனமேடை குழியில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். பிணம் எரிய தொடங்கியவுடன் 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர். ஆனால் ரெசியின் உடல் முழுவதுமாக எரியாமல் கிடந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் கேத்தீஸ்வரனின் நண்பர்கள் பழனி, முகமது பைசல் ஆகிய 2 பேரையும் பிடித்தனர். பின்னர் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top