குழித்துறை,
மார்த்தாண்டம் பகுதியில் முக கவசம் அணியாத 300 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் முக கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கிள்ளியூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அய்யப்பன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் ஜெனின் செல்வராஜ், மேஷாக், ஜோஸ், செல்வராஜ், ஆறுமுகவேலன், சுரேஷ்குமார், சுவாமி தாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று மார்த்தாண்டம் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
வெட்டுமணி, சென்னித்தோட்டம் பகுதிகளில் கார், ஆட்டோ, பஸ் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் முககவசங்கள் அணிந்து உள்ளனரா என்பதை சோதனையிட்டனர். அவ்வாறு சோதனையிட்டு முக கவசம் அணியாமல் பயணம் செய்தவர்களையும், வாகனங்களை ஓட்டிச் சென்றவர்களையும் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த வகையில் 300 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து கிள்ளியூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அய்யப்பன் கூறுகையில், சமூக இடைவெளி கடை பிடிக்காதவர்களுக்கு ரூ.500, முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும், எனவே பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முக கவசங்கள் அணிந்தும், சமூக இடைவெளியை கடை பிடித்தும் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
0 Comments