நாகர்கோவில்- பெங்களூரு எக்ஸ்பிரசில் என்ஜினீயர் மனைவியிடம் 33 பவுன் நகை, ரூ.1½ லட்சம் கொள்ளை!

நாகர்கோவில்- பெங்களூரு எக்ஸ்பிரசில் என்ஜினீயர் மனைவியிடம் 33 பவுன் நகை, ரூ.1½ லட்சம் கொள்ளை!

in News / Local

நாகர்கோவில் ஈத்தாமொழி அருகே உள்ள சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி, வயது 40. இவருடைய கணவர் செந்தில்குமார். இவர் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் பெங்களூரு வாஸ்து லேக் ரோட்டில் உள்ள விஷ்ணு பரிமளா காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாகர்கோவிலில் நடைபெறும் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள கிருஷ்ணவேணி முடிவு செய்தார். அதற்காக தன்னுடைய 2 மகன்களுடன் நாகர்கோவில்- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டார். அவர்கள் ஏ.சி. வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்தனர்.

கிருஷ்ணவேணி தனது கைப்பையில் 33 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வைத்து விட்டு தூங்கி உள்ளார். ரெயில் நேற்று காலை 8.20 மணிக்கு நாகர்கோவில் வந்தடைந்தது. அப்போது கிருஷ்ணவேணி தனது கைப்பையை தேடிய போது அது காணவில்லை. இரவில் மர்மநபர் 33 பவுன் நகை, ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் பற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் ரெயில் பெட்டிகள் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் கிருஷ்ணவேணியின் கைப்பை கிடைக்கவில்லை. இதுபற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

ஓடும் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட அதுவும் ஏ.சி.வசதி கொண்ட பெட்டியில் நகை- பணம் கொள்ளை போன சம்பவம் ரெயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொள்ளை சம்பவத்தால் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top