ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இன்று முதல் 6 டன் ஆக்சிஜன் வழங்கப்பட உள்ளது என தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார் .
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோயை தடுக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ,போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .மேலும் தமிழகத்தில் ஆக்சிஜன் அதிக அளவு தேவைப்படுவதால் தமிழக முதலமைச்சர் பிரதமரிடம் தமிழகத்திற்கு அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்படுவதை குறிப்பிட்டு தமிழ் நாட்டிற்கு தேவையான ஆக்சிஜன் வழங்கும்படி கேட்டுக் கொண்டதோடு ,அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் .
குமரி மாவட்டத்தில் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய 5 முதல் 6 டன் ஆக்சிஜன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விநியோகிக்கப்பட உள்ளது .மேலும் குமரி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
0 Comments