தஞ்சையை அடுத்த துலுக்கம்பட்டி நாடார் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், வயது 35. ரவுடியான இவர் சொந்தமாக மாட்டு பண்ணை ஒன்றை வைத்திருந்தார். நேற்று முன்தினம் மாடுகளின் தீவனத்திற்காக கூத்தாஞ்சேரியில் உள்ள ஒரு பண்ணைக்கு இவர் புல் அறுக்க சென்றார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த சிலர், மணிகண்டனை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில்,, ஆடி மாதம் மதுரை வீரன் கோவிலில் நடந்த கிடா வெட்டு திருவிழாவில் நடந்த மோதல் காரணமாக முன்விரோதம் காரணமாக மணிகண்டன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக துலுக்கம்பட்டியை சேர்ந்த ராஜா(31), சுபாஷ்(28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடையதாக தேடப்படுபவர்களில் சிலர் மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைய போவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தனிப்படை போலீசார் விரைந்து சென்று போலீஸ் நிலையத்தில் சரண் அடைய சென்ற 7 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.பின்னர் அவர்கள், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் அருள்மொழிப்பேட்டையை சேர்ந்த அசோக்(28), அய்யப்பன்(32) மற்றும் அவர்களது நண்பர்கள் அஜித்குமார், சதீஷ், மணிகண்டன், மணி, ராமச்சந்திரன் என்பது தெரிய வந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
0 Comments