அரபிக்கடலில் ‘மஹா’ புயல்: ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 95 குமரி மீனவர்கள் மாயம்!

அரபிக்கடலில் ‘மஹா’ புயல்: ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 95 குமரி மீனவர்கள் மாயம்!

in News / Local

குளச்சலில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், தேங்காப்பட்டணத்தில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாதுகாப்பாக மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டதற்கு முன்பாக ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற விசைப்படகு மீனவர்களை அருகில் உள்ள துறைமுகங்களில் கரை ஒதுங்கும்படி மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதனால், ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர்.

அதே சமயத்தில் புயல் எச்சரிக்கைக்கு முன்பாக தேங்காப்பட்டணம் மற்றும் கொச்சி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 8 விசைப்படகுகளில் 102 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். தற்போது, அரபிக்கடலில் ‘மஹா’ புயல் உருவாகியுள்ள நிலையில் அவர்களை பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த மீனவர்கள் வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, மிடாலம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்களில் 95 பேர் குமரி மீனவர்கள், 7 பேர் கேரள மீனவர்கள் ஆவர். இந்த 102 மீனவர்களும் மாயமானதாக வெளியான தகவல் குமரி மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களுடைய குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே நீரோடி கோவில் விளாகம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான அற்புத மாதா என்ற விசைப்படகில் செல்வராஜ் உள்பட குரும்பனையை சேர்ந்த மரிய வின்சென்ட், நாகையை சேர்ந்த குமாரராஜா, வாசுதேவன், வேளாங்கண்ணியை சேர்ந்த மோசை, ராமநாதபுரத்தை சேர்ந்த கோவிந்தன், கண்ணதாசன், தூத்துக்குடியை சேர்ந்த மாரியப்பன், கேரள மாநிலம் பொழியூரை சேர்ந்த சவேரியார், பூவாரைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் என 10 பேர் கொச்சி அருகே முனமம் துறைமுகத்தில் இருந்து கடந்த 13-ந் தேதி மீன்பிடிக்க சென்றனர்.

கொச்சியில் இருந்து 300 நாட்டிக்கல் மைல் தொலைவில் லட்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென ‘கியார்’ புயல் உருவானதாக எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து அவர்கள் உடனடியாக லட்சத்தீவு அருகே கல்ப்பனி தீவில் கடந்த 25-ந் தேதி இரவு கரை ஒதுங்கினர். அங்கு படகிலேயே தங்கி இருந்தனர்.

ஆனால், லட்சத்தீவு பகுதியில் ‘மஹா’ புயல் மையம் கொண்டதால், தீவு நிர்வாகத்தினர் அவர்களை படகில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து சென்று தங்க வைத்தனர். நள்ளிரவில் வீசிய சூறைக்காற்றில் செல்வராஜின் விசைப்படகு சேதமடைந்தது.

மேலும் அந்த விசைப்படகை தொடர்ந்து இயக்க முடியாமல் அவர்கள் தவித்து வருகிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top