கல்குளம் தாலுகா அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆதார் பதிவு மையம் கடந்த ஒரு வாரமாக செயல்படாத காரணத்தால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
அரசின் பல்வேறு நல உதவிகள் பெறுவதற்கும், சமையல் எரிவாயு மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெறுவதற்கும் ஆதார் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. மேலும் பள்ளி, கல்லூரி அட்மிஷன், வங்கி கணக்கு பான் அட்டை ஆகியவற்றிற்கும் ஆதார் தேவைப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகவளாகங்கள், நகராட்சி அலுவலக வளாகங்களில் ஆதார் பதிவு மையம் நிரந்தரமாக ஏற்படுத்தப்பட்டது.
ஆதார் பதிவு செய்தல், திருத்தம் என மக்கள் அடிக்கடி ஆதார் மையங்களில் வந்து செல்கின்றனர். இதனால் இம்மையங்களில் நெருக்கடி அதிகரித்து வருகிறது. குறிப்பாக சொந்த வீடு இல்லாத மக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவர்கள் வீடுகள் மாறிச் செல்லும் போது ஆதாரில் உள்ள முகவரியை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகின்றனர்.
ஆதார் திருத்தம் செய்ய தனியார் கணினி மையங்களுக்கும், இ-சேவை மையங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஓராண்டுக்கு முன் அந்த சேவை நிறுத்தப்பட்டது. இதனால் புதிய பதிவு மற்றும் திருத்தம் மேற்கொள்ள நிரந்தர ஆதார் பதிவு மையத்துக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட் டது. ஒரு மையத்தில் ஒரு நபருக்கு பதிவு செய்ய குறைந்த பட்சம் 20 நிமிடமாகிறது. இதனால் ஒரு நாள் 30 முதல் 40 பேர் வரை மட்டுமே பதிவு செய்ய முடியும், இதனிடையே நாடு முழுவதும் 6 ஆயிரத்து 500 தபால் நிலையங்களில் ஆதார் மையம் அமைக்கப்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு தபால் நிலையமாக ஆதார் பதிவு தொடங்கப்பட்டது. குமரி மாவட்டத்திலும் 20க்கும் மேற்பட்ட மையங்கள், பத்துக்கும் மேற்பட்ட வங்கிகளில் ஆதார் பதிவு மையங்கள் செயல்படுகிறது.
ஆனால் இது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படவில்லை இதனால் அரசு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆதார் பதிவு மையங்களுக்கே பொதுமக்கள் அதிகமாக வருகின்றனர்.
ஆதார் பதிவு இலவசமாக மேற்கொள்ளப்பட்டாலும், திருத்தங்களுக்கு 3.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் கல்குளம் தாலுகா பகுதியில் தாலுகா அலுவலக வளாகத்திலும், நகராட்சி அலுவலக வளாகத்திலும் ஆதார் மையங்கள் செயல்படுகின்றன. இது தவிர தக்கலை தலைமை தபால் நிலையம், கோர்ட் எதிரில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையிலும் ஆதார் மையங்கள் உண்டு . ஆனால் தாலுகா அலுவல்கம், நகராட்சி அலுவலக மையங்களில் அதிகமான மக்கள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தாலுகா அலுவலகமையம் செயல்படாமல் உள்ளது. தற்காலிகமாக மூடப்பட் டுள்ளதாக நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இதனால் நகராட்சி அலுவலக வளாகத்தில் மக்கள் அதிகமாக வருகின்றனர். அவர்கள் அங்கு மழை மற்றும் வெயிலில் இருந்து தப்பிக்க வசதியில்லாத நிலை உள்ளது. தாலுகா அலுவலக வளாகத்தில் மீண்டும் ஆதார் மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண் டியது முக்கியமாகும்.
இதுகுறித்து குமரி மேற்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் வர்க்கீஸ் கூறுகையில், தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ஆதார் பதிவு மையம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டுள்ளது. தாலுகாவின் பிற பகுதியில் இருந்து பஸ் ஏறி வரும் மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தக்கலை வந்த பிறகு ஒவ்வொரு மையமாக சென்று அலைக்கழிக்கப்படுகின்றனர். முறையான அறிவிப்பு எதுவும் இல்லை . வேறு மையங்கள் எங்கு உள்ளன என்பது குறித்து தகவல்கள் இல்லை . எனவே தாலுகா அலுவலகத்தில் வழக்கம்போல் ஆதார் பதிவு மையம் செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன், தாலுகா அலுவலகவளாகத்தில் பிற ஆதார் பதிவு மையங்களின் விபரம் குறித்த பிரமாண்ட போர்டு வைத்திட வேண்டும் என்றார்.
0 Comments