நாகர்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் இன்று தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை சந்தித்து அவரது கட்சியில் இணைந்தார். நாகர்கோவில் தொகுதியில் கடந்த 2011 முதல் 2016 வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் நாஞ்சில் முருகேசன். கடந்த 2016 சட்டசபை தேர்தலிலும் இவர், நாகர்கோவில் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் தோல்வி அடைந்த, அவருக்கு கட்சியில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் நாஞ்சில் முருகேசன் அ.தி.மு.க. கட்சி பணிகளில் அதிக ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் குமரியில் அதிமுக மாற்றப்பட்டு, அ.தி.மு.க. கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் புதியதாக நியமிக்கப்பட்டனர். இதில், நாஞ்சில் முருகேசன் வகித்து வந்த அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த நாஞ்சில் முருகேசன் அ.தி.மு.க.வில் இருந்து விலகி டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சேரப்போவதாக தகவல்கள் பரவியது. இந்த நிலையில் இன்று காலை தஞ்சாவூர் சென்ற நாஞ்சில் முருகேசன் அங்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை சந்தித்து சால்வை அணிவித்து அவரது கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
0 Comments