பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த ஜோதிடர்!

பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த ஜோதிடர்!

in News / Local

நாகர்கோவில் வடசேரி கொம்மண்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன், வயது 54. ஜோதிடரான இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவரது வீடு கடந்த 3 நாட்களாக திறக்கப்படவில்லை. உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முருகனின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி தொடங்கியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே வீட்டின் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் வீட்டினுள் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. எனவே இதுபற்றி வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது உடல் அழுகிய நிலையில் முருகன் பிணமாக கிடந்தார். இதனையடுத்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. தனிமையில் வாழ்ந்து வந்ததால் அவர் மனவேதனையில் இறந்திருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பூட்டிய வீட்டுக்குள் ஜோதிடர் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top