கோடை வெயிலை சமாளிக்க சில வழிமுறைகள்!

கோடை வெயிலை சமாளிக்க சில வழிமுறைகள்!

in News / Local

கோடைகாலம் வந்தாலே வெப்பத்தின் அள­வு நாளுக்கு நாள் அதிக­ரித்­து வெயில் கொளுத்துகிறது.வியர்வை, நாவறட்சி, அதுமட்டுமில்லாமல் எளிதாக நோய்களும் வந்து தொற்றிக் கொள்ளும். கோடைக்காலத்தில் நமது உடலுக்கு அதிகளவு நீர்ச்சத்து தேவைப்படும்

வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக சுரப்பதால், நீரோடு சேர்ந்து சோடியம் குளோரைட் போன்ற உப்புச் சத்துக்களும் உடலிலிருந்து வெளியேறுகின்றன.

இவை உடலின் மேற்பரப்பில் படிந்து அரிப்பு ஏற்படுகிறது. எனவே, வெளியில் போய் அறைக்­குள் வந்து, சிறிது நேரம் ஆனா பிறகு வியர்வை சற்று அடங்கியவுடன், வியர்வையில் நனைந்த பாகங்களை நன்றாகக் கழுவ வேண்டும், அப்படி செய்தால் அரிப்பு ஏற்படாது.

வியர்வையை கழுவாமல் அப்படியே விட்டுவிட்டால் அரிப்பு உருவாகி, அதனை சொறியும்போது கிருமித்தொற்று ஏற்படுகிறது. இதன் தொடர் விளைவாக பங்கஸ், வியர்க்குரு, தடிப்பு என ஏதாவது ஒரு பிரச்சினையால் தோல் பாதிக்கப்படுகிறது.மேலும் கோடைகாலங்களில் சுத்தமான குளிர்ந்த நீரால் குளிப்பது மிகவும் நல்லது.

வெயில் காலங்களில் இறுக்கம் அதிகமில்லாத ஆடை­க­ளை அணிவது மிகவும் அவசியமாகும்.

தோலில் ஏற்படும் கிருமித்தொற்று சிறு­நீ­­ர­க அலர்ஜியை உண்டாக்கும். உடலின் மேற்பரப்பில் படியும் சோடியம், தோலில் வறட்சியை ஏற்படுத்தும். முகத்திலும் இலேசான கருமை ஏற்படும்.

அதனால், சூரிய ஒளியின் தாக்கத்தைக் குறைக்கக்கூடிய கிரீம்களைப் பயன்படுத்தலாம். குளிக்கும்போது கடலை மாவு, பாசிப்பயறு மாவு என வறட்சியைத் தாங்கக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தலாம்.

முகத்தில் கிருமித்தொற்று ஏற்படு­வதை தடுக்க மஞ்சள் பூசுவது நல்லது.

உடலின் நீர் இழப்பை ஈடுகட்டும் விதமாக பருத்தி (cotton) உடை அணிவது நல்லது, சீரகத் தண்ணீர், இளநீர், தர்ப்பூசணி, மோர், பழச்சாறுகளையும் நிறைய பருகலாம். வியர்வையோடு வெளியேறும் உப்புச் சத்துக்களை ஈடுகட்ட, தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்துப் பருகலாம்.

குமரி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு நன்கு பரிச்சயமானது நன்னாரி சர்பத், இது, உடலில் உஷ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது.

பானகம் அல்லது பானகரம் இனிப்பும், புளிப்பும் கலந்த ஒரு நீராகாரம். இதை பருகினால் உடலின் மொத்தக் களைப்பையும் நீக்கி, புதுத்தெம்பை ஏற்படுத்தும் ஆற்றலை கொண்டது இதன் மகத்துவம் தெரிந்ததால் தான் , நம் முன்னோர் திருவிழாக்காலங்களில் பக்தி பரவசநிலையில் செய்யும் நேர்த்திக்கடன் மற்றும் கூட்ட நெரிசலில் பக்தர்களுக்கு ஏற்படும் டிஹைட்ரேஷனுக்குத் தீர்வாக இந்தப் பானகம் வழங்குவது வழக்கமாக கொண்டிருந்தனர்.

''வெயில் காலத்தில் நம்மைப் பாதுகாக்க இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் தான் பனைமரம். கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது. சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக, எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கை சாப்பிட்டால், தாகம் தானாக அடங்கிவிடும்.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாய் இருக்கும்போது தவிர்க்க முடியாமல் சுகாதாரமற்ற வீதி­யோ­ர பானக்கடையில் குளிர்பானங்களை அருந்துவது கூடாது. அது கோடைக்கால நோய்கள் வர கார­ண­மாக அமைந்­து­விடும்.

வெயில் காலங்களில் அடிக்கடி உடலுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம்.

வெயிலில் அலையும் வேலை செய்பவர்கள் அடிக்கடி நிழலான இடங்களில் சற்று அமர்ந்து ஓய்வு எடுத்து தண்ணீர் குடித்து விட்டு வேலையை தொடர்வது நல்லது.

தொப்பியோ, நல்ல குளிர் கண்ணாடியோ அணிவதன் மூலம் வெப்பத்தில் இருந்து தற்காலிகமாக தப்பிக்கலாம். தினமும் இரண்டு முறை குளிப்பது, மேல்நாட்டுப் பானங்களை ஒதுக்கிவிட்டு, இளநீர், மோர், தண்ணீர், எலுமிச்சை பானம், பார்லி தண்ணீர் போன்றவற்றையே பரு­க­வேண்­டும்

அதிகமாக காய்கறிகளையும், பழங்களையும், பானங்களையும் உணவாக கொள்ள வேண்டும்.

அதிக கொழுப்புள்ள உணவுகளையும், எண்ணெய் பலகாரங்கள், இனிப்பு வகைகளையும் வெயில் காலங்களில் தவிர்க்க வேண்டும். வெயில் காலங்களில் மது அருந்துபவர்கள் அதை நிறுத்துவதும் மிகவும் நல்லது. காரணம் மது உடலிலுள்ள ஈரப்பதத்தை குறைத்து ஆபத்தான சூழலை உருவாக்கி விடும்.

ஆஸ்துமா போன்ற நோயாளிகள் புழுதி நிறைந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

வெயிலில் அதிக நேரம் அலைவதும் நேரடியாக சூரிய ஒளியில் நிற்பதும் பல கண் நோய்களுக்கும் காரணமாகி விடுகிறது.சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் கண்களை பாதித்து கண்ணுக்குள் நோயின் வேர்களை பாதித்து விட்டால் அது நீண்ட நாட்களுக்கு வெளியே தெரியாமல் இருந்து பிற்காலங்களில் பார்வையை பாதித்து விடும்.கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இதற்காக வெள்ளரிக்காயை சிறுசிறு மெல்லிய வட்ட வடிவில் வெட்டி கண்களில் சிறிது நேரம் வைத்துக் கொள்ளலாம்.


வெயில் காலத்தில் அதிகளவு வியர்வை வெளியேறுவதால், உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும்.
அப்போது தண்ணீர் குடிக்காமல் விட்டால் கிட்னியில் கல், சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சினை, தோல் உலர்ந்து போதல் போன்ற பிரச்சினைகள் தோன்றும்.

அதிகம் தண்ணீர் குடிப்பது, பழங்கள் மற்றும் பழச்சாறுகள் எடுத்து கொள்வது ஆகியவற்றின் மூலம் தோல் பளபளப்பாக இருப்பதுடன், கோடையால் உடலில் உருவாகும் பிரச்சினைகளில் இருந்தும் தப்பிக்கலாம்.

அந்த வகையில் இந்த கோடைக் காலத்துக்கு ஏற்ற உண­­வுகள் வெள்ளரி, தக்காளி, வெங்காயம், கேரட் போன்ற காய்கறிகள் சேர்ந்த உண­வு­களை உண்­பது நல்லது. இதில் கொத்தமல்லியும் அவசியம். இதனை சாப்பிடுவதால், வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகள் குறையும்.

நீர்ச் சத்து மிக்க சௌசௌ, பூசணி, வெள்ளரி, பீர்க்கங்காய், தக்காளி போன்றவற்றில் ஒன்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்ள மறக்க வேண்டாம்.

பழங்­களை உண்­ணவில் சேர்ப்­பதன் மூலம் உஷ்ணத்தைத் தவிர்க்கலாம்.

இரவில் ஒரு டம்ளர் பால் குடிக்க­வும்.

மதியம் 11 மணியளவில் தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த ஒரு மாத காலத்துக்கு அதனை மாற்றி எலுமிச்சை சாறு அல்லது மோர் குடித்து வரலாம். கோடைக் காலத்தில் அதிக வியர்வை மூலம் உப்பு வெளியேறுவதால் உப்பு கலந்த பண்டங்கள் அன்றாட உணவில் சேர்ந்த்­துக்­கொள்­ள­வும்.

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மை கொத்தமல்லிக்கு உள்ளது.

எனவே, வீட்டில் சட்னி அல்லது துவையல் அரைக்கும் போது, ஒரு கைப்பிடி கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து அரைத்தால் சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top