தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18–ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க குமரி மாவட்டத்தில் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, அதன் அதிகாரிகள் இரவு பகலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு அனுமதி இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் குமரி மாவட்டத்தில் தற்போது வரை ரூ.85 லட்சத்து 89 ஆயிரத்து 585 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 39 கிராம் தங்கம், 30 கிராம் வெள்ளி, 11 மிக்சிகள் மற்றும் 23 மதுபாட்டில்கள் ஆகியவையும் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகர்கோவில் அருகே தேரேகால்புதூரில் பா.ஜனதா பிரசார வாகனத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அது கர்நாடக பதிவெண் கொண்ட வாகனம் ஆகும். மேலும் அந்த வாகனத்தில் பெரிய எல்.இ.டி. திரை இருந்தது. பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் படங்களும் அதில் வைக்கப்பட்டு இருந்தன.
பிரசார வாகனத்தை கொண்டு வருவதற்கான சரியான ஆவணங்கள் எதுவும் ஓட்டுனரிடம் இல்லாததால் அந்த வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாகனத்துக்கான ஆவணங்களை பேக்ஸ் மூலம் தருவதாக டிரைவர் கூறியுள்ளார். ஆனால் அதை அதிகாரிகள் ஏற்றுக் மருது. அசல் ஆவணங்கள் வேண்டும் என்று கூறி வண்டியை பறிமுதல் செய்தனர்,
இதை தொடர்ந்து அசல் ஆவணங்களை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. பறிமுதல் செய்யப்பட்ட பிரசார வாகனம் தற்போது நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலகம் முன் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
0 Comments