கன்னியாகுமரி புத்தகத் திருவிழா நேற்று மாலை கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் இந்துக் கல்லூரியின் அருகிலுள்ள அனாதைமடத்தில் கொண்டாட்டமாகத் துவங்கியது. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் மூன்றாவது புத்தகக் கண்காட்சியாகும். இந்தக்கண்காட்சியை தமிழ்நாடு அரசின் புதுடெல்லி சிறப்பு பிரதிநிதியான தளவாய் சுந்தரம் அவர்கள் திறந்து வைத்தார். குமரி மாவட்ட ஆட்சியாளர் பிரசாந்த்.மு.வடநேரே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
இப்புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன், இந்தியாவின் முக்கிய பதிப்பகங்கள் சிலவும் கலந்து கொள்கின்றன. இந்தக் கண்காட்சி நாகர்கோவில் புத்தகக் கண்காட்சி எனும் பெயரிலும் அழைக்கப்படுகிறது.
இக்கண்காட்சியில் பதிப்பகங்கள் அல்லது விற்பனையாளர்களுக்குத் தனித்தனியாக கடைகள் அமைக்கப்படுகின்றன. இந்தக் கடைகளில் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படுகின்றன. தினமும் காலை 11 மணிக்குத் துவங்கி இரவு 9மணிக்கு நிறைவு பெறும். நேற்று துவங்கி இம்மாதம் 25 ஆம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்க்கவும், ஊக்குவிக்கவும் இந்த புத்தகத் திருவிழா நடைபெறுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இங்கு புத்தகங்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
0 Comments