தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதல்; 10–ம் வகுப்பு மாணவன் பலி!

தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதல்; 10–ம் வகுப்பு மாணவன் பலி!

in News / Local

தக்கலை அருகே குழிக்கோடு, ஓடினவிளையை சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது 37). வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் சரண் (வயது 14). இவன் பரைக்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று காலையில் சரண் பள்ளிக்கு செல்வதற்காக கோழிப்போர்விளை சந்திப்பில் பஸ்சுக்காக காத்து நின்றான். அப்போது, அந்த வழியாக அவனுடன் படிக்கும் நண்பன் பூங்கரை பகுதியை சேர்ந்த மாதவபிரசாத் மகன் கார்த்திக் (15) மோட்டார் சைக்கிளில் வந்தான். கார்த்திக்கை பார்த்ததும் சரண் தானும் மோட்டார் சைக்கிளில் ஏறி கொண்டார். இதையடுத்து நண்பர்கள் இருவரும் ஒன்றாக புறப்பட்டனர்.

பருத்திகாட்டுவிளை பகுதியில் சென்ற போது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. திடீரென அது சாலையோரம் நின்ற மின்கம்பத்தில் பலமாக மோதியது. இதில் நண்பர்கள் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அங்கு கூடினர். அவர்கள் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், சரண் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

தொடர்ந்து, கார்த்திக் மேல் சிகிச்சைக்காக மணலியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தக்கலை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி 10–ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top