கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே இடைக்கோடு பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருக்கும், பாகோடு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் நேற்று கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டது. பாகோடு பகுதியில் உள்ள ஒரு சிஎஸ்ஐ தேவாலயத்தில் தான் கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரு வீட்டு தரப்பிலும் உறவினர்கள், நண்பர்கள் குவிந்து வர ஆரம்பித்துவிட்டனர்.
மணமகனின் கையில், மணமகளின் கையை பிடித்து கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது . இதற்கு பிறகுதான் தாலி கட்டும் நிகழ்வு நடக்கும். சபை போதகர் வாக்குறுதிகளை வாசிப்பதும், அந்த வாக்குறுதிகளை மணமக்கள் ஏற்றுக் கொள்வதாக பதிலுரைப்பதும் வழக்கம். அதன்படியே போதகரும் வாக்குறுதிகளை வாசிக்க ஆரம்பித்தார்.
ஆனால் மணப்பெண்ணிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்து சர்ச்சில் இருந்த எல்லாரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மணப்பெண் வீட்டுக்காரர்கள் அவரை தூக்கி சர்ச்சின் உள்பகுதியில் உள்ள ரூமுக்கு தூக்கி சென்றனர். உடனடியாக ஒரு டாக்டர் வரவழைக்கப்பட்டார். மணப்பெண்ணை செக் செய்து பார்த்துவிட்டு, "நல்லாதானே இருக்காங்க.. ஒரு பிரச்சனையும் இல்லையே.. கல்யாணத்தை நடத்துங்க" என்றார்.
அப்போது கல்யாண பெண் திடீரென அந்த டாக்டரின் கையை பிடித்து கொண்டு, "என்னை காப்பாத்துங்க டாக்டர். எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல. இதை எப்படியாவது நிறுத்திடுங்க" என்று கெஞ்சினார். இதை வெளியே பதற்றத்துடன் நின்று கொண்டிருந்த மாப்பிள்ளை இந்த வார்த்தைகளை கேட்டுவிட்டார்.
இருந்தாலும் மணப்பெண்ணை தனியாக அழைத்து பேசி பார்த்தார். உங்களை எனக்கு பிடிக்கல என்று அந்த பெண் சொல்லிவிட்டார். மாப்பிள்ளையை தொடர்ந்து இரு வீட்டு நபர்களும் பெண்ணிடம் பேசியும் ஒன்றும் வேலைக்காகவில்லை. இதுக்குமேல கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணினால் சிக்கல்தான் ஏற்படும் என்பதால் உடனடியாக திருமணத்தை நிறுத்துமாறு போதகர் சொல்லிவிட்டார். உடனே பெண் வீடு, மாப்பிள்ளை வீடு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டு கொள்ள ஆரம்பித்தனர். பிறகு அங்கிருந்தவர்கள் அவர்களை சர்ச்சை விட்டு ஒருவழியாக வெளியேற்றினர்.
0 Comments