நாகர்கோவிலில் துணிகரம்: கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் உறவினர் வீட்டில் கொள்ளை முயற்சி

நாகர்கோவிலில் துணிகரம்: கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் உறவினர் வீட்டில் கொள்ளை முயற்சி

in News / Local

நாகர்கோவில் நேசமணிநகர் பூங்காநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 76), சென்னையில் வருவாய் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஜெனட் கமலம். கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் மனைவியுடன் விஸ்வநாதன் சென்னையில் உள்ள தன் மகன் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் யாரும் இல்லை.

இந்த நிலையில் வீட்டு வேலைக்காரர் நேற்று காலை வீட்டை சுத்தம் செய்வதற்காக சென்றார். அப்போது வீட்டின் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வேலைக்காரர் உடனடியாக நேசமணிநகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வீட்டின் சாவி சென்னையில் உள்ள விஸ்வநாதனிடம் இருப்பதால் போலீசாரால் வீட்டுக்குள் செல்ல முடியவில்லை.

சம்பவம் பற்றி விஸ்வநாதனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவருடைய சம்மதத்தின் பேரில் வீட்டின் பின்புற கதவின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் போலீசார் சென்று பார்வையிட்டனர். வீட்டில் 3 அறைகளில் பீரோக்கள் இருந்தன. அந்த 3 பீரோக்களையும் மர்ம நபர்கள் உடைத்து நகை, பணம் இருக்கிறதா? என்று தேடியுள்ளனர். பீரோக்களில் இருந்த பொருட்களை அள்ளி வெளியே வீசியுள்ளனர். மர்ம நபர்களுக்கு நகை மற்றும் பணம் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

வீட்டில் ஒரு போட்டோவுக்கு பின்புறமாக 5 பவுன் நகையை விஸ்வநாதன் மறைத்து வைத்துவிட்டு சென்றுள்ளார். இந்த தகவலை செல்போன் மூலம் போலீசாரிடம் அவர் கூறினார். அதன்பிறகு அந்த போட்டோவுக்கு பின்புறம் போலீசார் பார்த்தபோது அங்கு நகை அப்படியே இருந்தது. அந்த நகையை போலீசார் மீட்டனர்.

ஆனால் வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை மர்ம நபர்கள் அள்ளி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். சென்னையில் இருந்து விஸ்வநாதன் சொந்த ஊர் திரும்பிய பிறகு தான் பொருட்கள் ஏதேனும் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளதா? என்ற விவரம் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஓய்வுபெற்ற வருவாய் அதிகாரி விஸ்வநாதனும், போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் உறவினர்கள் ஆவர். அதாவது விஸ்வநாதனுக்கு 4 மகன்கள் உண்டு. அதில் ஒருவர் கிளமெண்ட்பென் ஆவார். இவரும், போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் ஒரே குடும்பத்தில் பெண் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top