கன்னியாகுமரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேர் அம்மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் தொழிலதிபர் சுரேஷ் (49). இவர் அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சுரேஷூக்கு கொரோனா நோய் தொற்று குணமாகி வீட்டுக்கு சென்ற மறுநாளே கண் வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கோவிட் பற்றிய அனைத்து லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கே படியுங்கள்
தொடர்ந்து கண்ணில் இருந்து நீர் வடிய தொடங்கிய நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து, அவர் கொரோனா சிகிச்சை பெற்று வந்த அரசு மருத்துவ கல்லூரியிலே மீண்டும் அவரை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யபட்டது.
உடனடியாக மருத்துவர்கள் அவரை தீவீர சிகிச்சை பிரிவில் சேர்த்து கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சுரேஷ் நேற்று இரவு உயிரிழந்தார். இது குமரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்தொற்றுக்கு ஏற்படும் முதல் உயிரிழப்பாகும். இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
0 Comments