களியக்காவிளை அருகே கோழிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெய்லானி (வயது 49), மெத்தை வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு படந்தாலுமூடு சோதனை சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் ஓன்று திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெய்லானி தூக்கி வீசப்பட்டார். அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறி, இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெய்லானி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெய்லானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். விபத்து நடந்ததும் கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். லாரி டிரைவர் களியக்காவிளையை அடுத்த பனங்காலையை சேர்ந்த ராஜன் என்பவரை பொதுமக்கள் பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதைத்தொடர்ந்து தப்பியோடிய கார் டிரைவரை கைது செய்யக்கோரி நள்ளிரவில் போலீஸ் நிலையம் முன் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீசார், கார் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி கைது செய்வோம் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
அதன்பிறகு விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
விபத்தில் பலியான ஜெய்லானிக்கு ஜெமிலித் என்ற மனைவியும், ஜெனீர், ஜெலீப், சனோப் என்ற 3 மகன்களும் உள்ளனர்.
0 Comments