குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் முன்பு காலை, மாலை வேளைகளில் பைக்குகளில் சுற்றும் ரோமியோக்கள் மாணவிகளை கேலி, கிண்டல் செய்வது வாடிக்கையாக இருந்து - வருகிறது. திங்கள்சந்தை பகுதியிலும் இவர்களின் தொல்லை மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் காலை, மாலையில் பள்ளி, கல்லூரி மாணவிகள் நடந்து செல்லவே அச்சமடைந்து வருகின்றனர்.
இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் போலீசிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில் எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். நேற்று முன்தினம் மாலை ஹைவே போலீஸ் எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சுங்கான்கடை கல்லூரி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கல்லூரி மாணவர்கள் 2 பேர் பைக்கில் வேகமாக வந்தனர்.
அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதி வேகமாக செல்ல கூடாது என்று அறிவுரை கூறினர். இதையடுத்து மாணவர்கள் எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இருவரும் கொலை மிரட்டல் விடுத்து சென்று விட்டனர்.
இது குறித்து எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தி இரணியல் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் இருவரும் புலியூர்குறிச்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இருவரும் நாகர்கோவில் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.
0 Comments