தக்கலை, அரசு மருத்துவமனை பகுதியை சேர்ந்தவர் ஈனோக் ஜான் (வயது 46), கிறிஸ்தவ போதகரான இவர் நேற்று நாகர்கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்ப மோட்டார் சைக்கிளில் தக்கலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வில்லுக்குறி அருகே தோட்டியோடு பகுதியில் சென்ற போது, முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது, எதிரே வந்த கேரள அரசு பஸ், ஈனோக் ஜான் வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஈனோக் ஜான் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
மேலும், விபத்து தொடர்பாக கேரள பஸ் டிரைவர் கோட்டயத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (52) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறந்த ஈனோக் ஜானுக்கு தயாராணி (39) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். தயாராணி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
0 Comments