உலக ரட்சகர் என்று கிறிஸ்தவ மக்களால் போற்றப்படும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உலகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதேபோல குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பண்டிகையையொட்டி குமரி மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனையில் அந்தந்த பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சி.எஸ்.ஐ. ஆலயங்கள் உள்ளிட்ட பிற ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நேற்று அதிகாலை 4 மணிக்கு நடந்தது. நாகர்கோவில் ஹோம் சர்ச்சில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஆயர் செல்லையா தலைமையில் பிரார்த்தனை நடந்தது. பின்னர் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் செல்போன் மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்திகளை அனுப்பினர். மேலும் ஒவ்வொரு வீடுகளிலும் கிறிஸ்துமஸ் விருந்து தடபுடலாக நடந்தது. பல வீடுகளில் பிரியாணி தயார் செய்தனர். அதை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்தனர்.
மேலும் பண்டிகையையொட்டி இளைஞர்களும், சிறுவர்- சிறுமிகளும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். சில இடங்களில் சாலைகளில் ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டு கிறிஸ்தவ பாடல்கள் இசைக்கப்பட்டன. அதே சமயத்தில், இளைஞர்கள் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற படி மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்ததை காண முடிந்தது.
மாலை நேரங்களில் சுற்றுலா தலங்களுக்கு சென்று பொழுதை கழித்தனர்.
0 Comments