மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் ஆஷ்டீக் குமார் பாண்டே. சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது அங்கு வந்த அனைவருக்கும் பிளாஸ்டிக் கப்பில் தேநீர் வழங்கப்பட்டது. `ஒருமுறைப் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளை ஒழிக்க வேண்டும் எனப் பேசிவருகிறோம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களில் பிளாஸ்டிக் கப்புகளில் டீ வழங்குகின்றனர்' என்று பேச்சு எழுந்துள்ளது. இதைச் சில செய்தியாளர்கள் ஆட்சியரிடம் சுட்டிக்காட்டினர். மாநிலம் முழுவதும் ஒருமுறைப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே இதைப் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கோரினார். மேலும், தனது நிர்வாகத்தின் கீழ் நடந்த தவறுக்காக தனக்குத் தானே ரூ.5,000 அபராதம் விதித்துக்கொண்டார். பிளாஸ்டிக் கப்பில் டீ வழங்கியதற்காக தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளை கடுமையாகச் சாடினார். மகாராஷ்டிராவில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்துவதற்குத் தடை உள்ளது. இதே கலெக்டர் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக அபராதம் விதிப்பது இது இரண்டாவது முறையாகும். தேர்தலில் போட்டியிட வந்த நபர் ஒருவர் பிளாஸ்டிக் பையில் பணத்தைக் கொண்டுவந்ததற்காக 5,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments