கிறிஸ்துமஸ் கொண்டாட புதுச்சேரி வந்த மாணவர் கடலில் மூழ்கி பலி!

கிறிஸ்துமஸ் கொண்டாட புதுச்சேரி வந்த மாணவர் கடலில் மூழ்கி பலி!

in News / Local

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு புதுச்சேரிக்குச் சுற்றுலா வந்த மாணவர்களில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மதுரை அனஞ்சியூரை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மகன் சியாம் (20). மதுரையில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தனது நண்பர்கள் சுபாஷ் மற்றும் யோகேஷ் ஆகியோருடன் நேற்று முன் தினம் இரவு புதுச்சேரிக்குக் கிளம்பி வந்துள்ளார்.

புதுச்சேரிக்கு வந்த அவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்த பிறகு நேற்று பகல் 2 மணியளவில் 3 பேரும் சின்ன வீராம்பட்டினம் கடற்கரை பகுதிக்குச் சென்றனர். அவர்கள் கடலில் இறங்கிக் குளித்து விளையாடிய போது வழக்கத்தை விட அலையின் சீற்றம் வேகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது எழுந்த ராட்சத அலை மூவரையும் சுருட்டி இழுத்துச் சென்றுள்ளது. மூவரும் உதவிக் கேட்டு கைகளை உயர்த்தி தத்தளித்துள்ளனர். கடற்கரையில் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாவலர்கள் 2 பேர், மாணவர்கள் தத்தளிப்பதைக் கண்டு உடனடியாக கடலுக்குள் குதித்து மூவரையும் மீட்டனர்.

பின்னர் மூவரையும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் சியாம் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். நண்பர்கள் சுபாஷ் மற்றும் யோகேஷ் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாணவன் இறப்பு குறித்து அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் வந்தவுடன் உடல் ஒப்படைக்கப்படும் என்றும் போலீசார் கூறுகின்றனர். கிறிஸ்துமஸ் கொண்டாட வந்த மாணவர் ஒருவர் உயிரிழந்தது சக நண்பர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top