கன்னியாகுமரி ரயிலில் 18 கிலோ கஞ்சா கடத்திய கேரளா வாலிபர் கைது செய்யப்பட்டார். தமிழகம் வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆந்திரா, தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சா வாங்கி கேரள எல்லையான குமுளி, கன்னியாகுமரி மாவட்டங்கள் வழியாக கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது.
இதை தடுக்க கேரள போலீசாரும், காவல் துறையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரயில்களில் கடத்தப்படுவதால் ரயில்வே போலீசாரும் ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் இதுவரை கஞ்சா கடத்தும் கும்பலை சேர்ந்த ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கன்னியாகுமரி - பெங்களூர் ஐலண்ட் எக்ஸ்பிரசில் பாறசாலை ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணி வைத்திருந்த பையில் 18 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் கொல்ல மையநாடு பகுதியை சேர்ந்த அனில்குமார் (47) என்பது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து போலீசார் அனில் குமாரை கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா வாங்கி பஸ் மூலம் நாகர்கோவில் கொண்டு வந்துள்ளார். இங்கிருந்து பஸ்சில் கேரளா சென்றால் சோதனையில் சிக்கி விடுவோம் என்று கருதி ரயிலில் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments