இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பெருவிழாவாக கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். ஈஸ்டருக்கு முன்பு கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்தனர். அந்த நாட்களில் தியானங்கள், சிலுவைப் பாதைகள் மற்றும் தவ முயற்சிகளில் ஈடுபட்டனர். கடந்த வியாழக்கிழமை இயேசு நாதர் சீடர்களின் பாதங்களை கழுவியதை நினைவு கூரும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இயேசு இறந்த தினத்தை முன்னிட்டு சிலுவை ஆராதனை, சிலுவைப்பாதை நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றது. நேற்று முன்தினம் நள்ளிரவு இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பெருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள் கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்றது.
இரவிபுதூர்கடை தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் நடைபெற்ற உயிர்ப்பு பெருவிழா திருப்பலியை குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருட்பணி இயேசு ரத்தினம் தலைமை தாங்கி நடத்தினார்.
களியக்காவிளை அருகே திருத்துவபுரம் மூவொரு இறைவன் பேராலயத்தில் நடந்த திருப்பலியில் பங்குத்தந்தை பீட்டர் தலைமை தாங்கினார். வெட்டுமணி தூய அந்தோணியார் திருத்தல பங்கில் நடந்த திருப்பலி மற்றும் உயிர்ப்பு பெருவிழா நிகழ்ச்சிகளில் பங்குத்தந்தை அந்தோணி முத்து, இணை பங்குத்தந்தை மரியமார்ட்டின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விரிகோடு இதயபுரம் இயேசுவின் திருஇருதய ஆலயத்தில் நடந்த திருப்பலியில் பங்குத்தந்தை கிறிஸ்டோபர், இலவுவிளை தூய அலோசியஸ் ஆலயத்தில் பங்குத்தந்தை ஆண்டனி ஜெயக்கொடி, காப்புக்காடு ஆலயத்தில் பங்குத்தந்தை மரிய சூசை, நட்டாலம் தேவசகாயம் பிள்ளை திருத்தலத்தில் அதன் அதிபர் ரசல்ராஜ், பாலவிளை ஆலயத்தில் வட்டார முதன்மை பணியாளர் புஷ்பராஜ் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர்.
மார்த்தாண்டம் மறைமாவட்டம் கிறிஸ்துராஜபுரம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் பங்குதந்தை ஜோஸ் பிரைட், விமலபுரம் ஆலயத்தில் பங்குத்தந்தை ஏசுதாஸ் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர். மேலும் விரிகோடு சி.எஸ்.ஐ. ஆலயத்தில் போதகர் ராஜா செல்வன் தலைமையில் ஈஸ்டர் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இது போல மார்த்தாண்டம், நாகர்கோவில் பகுதியில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களிலும், சி.எஸ்.ஐ. மற்றும் எல்லா கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இந்த ஆராதனைகளில் திரளானோர் கலந்து கொண்டனர்.
0 Comments