சென்னையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எலெக்டிரிக் ஆட்டோ சேவையை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 தரும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். பொங்கள் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் வழங்கப்படவுள்ளது. அதோடு, பொங்கலுக்கான விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு பொங்கலுக்கு ரூ.425.85 கோடி மதிப்புள்ள 1.67 கோடி, வேட்டி, சேலைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இதை தொடர்ந்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பசுமை ஆட்டோ திட்டத்தின் கீழ் பச்சை நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஆட்டோக்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய எலக்ட்ரிக் ஆட்டோவை ஒரு முறை (3 மணி நேரம்) சார்ஜ் செய்தால் 100 கி.மீ தூரத்திற்கு பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிசிடிவி, ஜிபி.எஸ் உள்ளிட்ட கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. பசுமை திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சென்னையில் 100 ஆட்டோக்களின் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
0 Comments