தோவாளை தாலுகா அலுவலகத்தில் இருந்து சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் பனி நேற்று தொடங்கியது!

தோவாளை தாலுகா அலுவலகத்தில் இருந்து சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் பனி நேற்று தொடங்கியது!

in News / Local

பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் இந்த எந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலையில் குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, தேர்தல் பார்வையாளர் (பொது) காஜல் மற்றும் அதிகாரிகள் தோவாளை தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களுடன், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் இருந்தனர்.

தொடர்ந்து, வாக்குப்பதிவு எந்திரங்களை சட்டசபை தொகுதி வாரியாக அனுப்பி வைக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நிருபர்களிடம் கூறியதாவது:-

தோவாளை தாலுகா அலுவலகத்தில் இருந்து எடுத்துச்செல்லப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த சட்டசபை தொகுதியில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும். தேர்தலுக்கு ஒரு நாள் முன்பாக அனைத்து எந்திரங்களும் சரிபார்க்கப்பட்டு, அந்தந்த வாக்கு சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மாவட்டம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடத்ததேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, நாகர்கோவில் உதவி கலெக்டர் விஷ்ணு சந்திரன், பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யா அறி, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார், தோவாளை தாலுகா தாசில்தார் சொக்கலிங்கம் பிள்ளை, மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

சட்டசபை தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-

நாகர்கோவில் சட்டசபை தொகுதிக்கு 330 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 330 வாக்குப்பதிவு எந்திரங்களும், 358 வாக்களிப்பதை சரிபார்க்கும் எந்திரங்களும் (வி.வி.பேட் எந்திரங்கள்) அனுப்பி வைக்கப்படுகிறது. இதே போல் கன்னியாகுமரி சட்டசபை தொகுதிக்கு 372 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 372 வாக்குப்பதிவு எந்திரங்களும், 403 வாக்களித்ததை சரிபார்க்கும் எந்திரங்களும், குளச்சல் சட்டசபை தொகுதிக்கு 360 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 360 வாக்குப்பதிவு எந்திரங்களும், 390 வாக்களித்ததை சரிபார்க்கும் எந்திரங்களும் அனுப்பப்படுகிறது. பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிக்கு 327 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 327 வாக்குப்பதிவு எந்திரங்களும், 354 வாக்களித்ததை சரிபார்க்கும் எந்திரங்களும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு 326 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 326 வாக்குப்பதிவு எந்திரங்களும், 353 வாக்களித்ததை சரிபார்க்கும் எந்திரங்களும் அனுப்பி வைக்கப்படுகிறது. கிள்ளியூர் சட்டசபை தொகுதிக்கு 332 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 332 வாக்குப்பதிவு எந்திரங்களும், 359 வாக்களித்ததை சரிபார்க்கும் எந்திரங்களும் அனுப்பப்படுகிறது. 6 தொகுதிகளுக்கும் மொத்தம் 2047 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 2047 வாக்குப்பதிவு எந்திரங்களும், 2217 வாக்களிப்பதை சரிபார்க்கும் எந்திரங்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top