நாகர்கோயில் அருகே ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து, ரூ 2 கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசம்!

நாகர்கோயில் அருகே ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து, ரூ 2 கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசம்!

in News / Local

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த குமாரபுரம் அருகே முட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் சோமன் (வயது 64). இவர், அந்த பகுதியில் ரப்பர் ஷீட் உலர வைக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். அதில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ரப்பர் விவசாயிகளிடம் இருந்து ரப்பர் ஷீட்டுகளை கொள்முதல் செய்து அவற்றை உலர வைத்து மதுரை மற்றும் உத்தரபிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலுள்ள டயர் கம்பெனிகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு ரப்பர் ஷீட்டுகளை உலர வைப்பதற்காக தீ மூட்டப்பட்டது. இந்த தீ இரவில் எப்படியோ தொழிற்சாலையில் மற்ற இடங்களுக்கு பரவியது. நேற்று காலை 8.30 மணியளவில் தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியதை அப்பகுதியினர் கண்ட பின்னர் தான் தொழிற்சாலையில் தீப்பிடித்தது தெரியவந்தது. அவர்கள் விரைந்து வந்து பார்த்த போது அங்கு உலர வைக்கப்பட்டிருந்த ரப்பர் ஷீட்டுகளில் தீப்பிடித்து மள மளவென பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

இதுபற்றி தக்கலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு அலுவலர் சுரேஷ் சந்திரகாந்த தலைமையில், வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், தீ அங்கிருந்த ஏராளமான ரப்பர் ஷீட்டுகளில் பற்றி எரிந்ததால் உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

இதனால் 3 தீயணைப்பு வண்டிகளில் வந்த 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியில் அப்பகுதி இளைஞர்களும், பொதுமக்களும் ஈடுபட்டனர். தீவிபத்தால் தொழிற்சாலையில் அருகில் நின்ற தென்னை, வாழை, ரப்பர் மரங்களும் கருகின.

தீயணைப்பு வண்டியில் இருந்த தண்ணீர் காலியானதால் அந்த பகுதியில் ஓடும் வள்ளியாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3½ மணிநேரம் போராட்டத்துக்கு பின் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.

மேலும், மின்வாரியத்துக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்த தீவிபத்தால் அப்பகுதி வழியாக செல்லும் அரசு பஸ், பள்ளி-கல்லூரி வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. தொழிற்சாலையின் ஒரு பகுதியில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த ரப்பர் ஷீட்டுகளை உடனடியாக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதனால், அவை தீவிபத்தில் இருந்து தப்பியது.

இந்த தீவிபத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள ரப்பர் ஷீட்டுகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுபற்றி கொற்றிகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ரப்பர் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரபரப்பு ஏற்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top