கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பேலஸ்ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி கிரிஜா, ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் லல்லு கிருஷ்ணா (வயது 28), பளுகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆர்யாவுக்கும் கடந்த 9 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆர்யாவும் டாக்டராக உள்ளார். மேற்படிப்புக்காக ஆர்யா அகமதாபாத்தில் தங்கி படித்துவண்டார். லல்லு கிருஷ்ணா பெற்றோருடன் சொந்த ஊரில் வசித்து வந்தார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் லல்லு கிருஷ்ணா வீட்டில் இருந்தார். மதியம் 2 மணி அளவில் சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு தூங்குவதற்காக சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவருடைய அறை கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகமடைந்த லல்லு கிருஷ்ணாவின் சகோதரர் இரவு 8.30 மணி அளவில் அறை கதவை தட்டி பார்த்தார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அவர் அறையின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அங்கு லல்லு கிருஷ்ணா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று லல்லு கிருஷ்ணாவை மீட்டார். பின்னர் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டடாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து லல்லு கிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், டாக்டர் லல்லு கிருஷ்ணா தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 9 மாதத்தில் அரசு டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவருடைய உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
0 Comments