அரசு டாக்டர்- ஊழியர்கள் அலட்சியத்தால் பிரசவத்தின் போது குழந்தை சாவு; பெண்ணின் உயிருக்கு ஆபத்து : நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம், கணவர் புகார்!

அரசு டாக்டர்- ஊழியர்கள் அலட்சியத்தால் பிரசவத்தின் போது குழந்தை சாவு; பெண்ணின் உயிருக்கு ஆபத்து : நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம், கணவர் புகார்!

in News / Local

அரசு டாக்டர்- ஊழியர்கள் அலட்சியத்தால் பிரசவத்தின் போது தனது குழந்தையை இழந்து, மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருக்க, தனது மனைவியை காப்பாற்ற தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தனது குழந்தை சாவிற்கு காரணமாக இருந்த அரசு டாக்டர்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி கலெக்டரிடம், கணவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள சுருளக்கோடு செல்லன்திருத்தி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). இவர் தன்னுடைய உறவினர்களுடன் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் கலெக்டரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கூலி வேலை செய்து வருகிறேன். என்னுடைய மனைவி பெயர் சபிதா. அவர் கர்ப்பமாகி 6 மாதங்கள் வரை சுருளக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வந்தார். அதன்பிறகு பூதப்பாண்டி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனையும், சிகிச்சையும் பெற்று வந்தார்.

கடந்த 27-ந் தேதி மாலை 4.30 மணி அளவில் என்னுடைய மனைவிக்கு பிரசவவலி ஏற்பட்டது. அவரை நான் பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். அன்றைய தினம் பணியில் இருந்த டாக்டர் மற்றும் ஊழியர்கள் என்னிடம், உங்கள் மனைவிக்கு சுக பிரசவம் நடைபெறும் என்று சொல்லிவிட்டு பிரசவ அறைக்கு அழைத்துச் சென்றனர். இரவு 8 மணிக்கு பிரசவம் இருக்கும் என்றும் சொன்னார்கள். நான் என்னுடைய உறவினர்களுடன் பிரசவ அறைக்கு வெளியே அமர்ந்து இருந்தோம்.

திடீரென என்னுடைய தங்கை பிரசவ அறைக்கு சென்றார். அப்போது ஆஸ்பத்திரி ஊழியர்கள் என்னுடைய மனைவியின் வயிற்றுப்பகுதியை அமுக்கிக் கொண்டு இருந்தனர். அவளோ, பிரசவ வலியால் துடித்துக் கொண்டு இருந்தாள். நாங்கள் உடனே அறுவை சிகிச்சை செய்தாவது குழந்தையை வெளியே எடுங்கள் என்று கூறினோம். ஆனால் அவர்கள் தை சிறுதும் பொருட்படுத்தாமல் . திடீரென்று என்னுடைய மனைவிக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்தது. உடனே செவிலியர்கள் எங்களை அழைத்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறினர்.

108 ஆம்புலன்ஸ் வசதி கேட்டோம். ஆம்புலன்சை உடனே வரவழைக்க முடியாது, எனவே நீங்கள் தனியார் வாகனத்தில் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினர்.

இரவு 11.30 மணி அளவில் என்னுடைய மனைவியை தனியார் ஆம்புலன்சில் உறவினர்கள் உதவியுடன் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் சேர்த்தோம். என்னுடைய மனைவி ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்தார்கள். அப்போது குழந்தைக்கு மூச்சு வரவில்லை என்று கூறி குழந்தையை வென்டிலேட்டரில் வைத்தார்கள். கடந்த 30-ந் தேதி மாலை சுமார் 5.30 மணி அளவில் என்னுடைய குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதனால் நானும் என் குடும்பத்தினரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம்.

பின்னர் குழந்தையின் உடலை பெற்றுக்கொண்டு எனது சொந்த ஊரில் அடக்கம் செய்தோம். தற்போது என்னுடைய மனைவி ஆபத்தான நிலையில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

என்னுடைய மனைவி உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் பிரசவத்தின் போது அலட்சியமாக இருந்து என்னுடைய குழந்தையின் இறப்புக்கு காரணமான பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மற்றும் ஊழியர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்து இறந்த சம்பவம் தொடர்பாக குமரி கலெக்டரிடம் கொடுக்கப்பட்டுள்ள புகார் மனு அரசு டாக்டர்கள், ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top