கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில், பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து வேட்பாளராக போட்டியிட்டார்.
இதில் 2.4 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வசந்தகுமார், எம்.பி.யாக நாடாளுமன்றம் செல்லவிருப்பதால், தனது நாங்நேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்ஏக்களின் எண்ணிக்கை 8ல் இருந்து 7 ஆக குறைந்துள்ளது.
சென்னையில் இன்று தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் தனபாலிடம் கொடுத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாங்குநேரி தொகுதியில் 5 ஆண்டுகளுக்கான திட்டங்களை 3 ஆண்டுகளில் நிறைவேற்றியிருப்பதாகவும், தொடர்ந்து தனது தனிப்பட்ட முயற்சியில் நாங்குநேரிக்கு பல நலத்திட்டங்களை செய்வேன் என உறுதியளிப்பதாகவும் கூறினார்.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா என்பதை தலைமை தான் முடிவுசெய்யும் எனவும், காங்கிரஸ் கட்சிக்கு நாங்குநேரியில் ஆதரவு இருப்பதால் காங்கிரஸ் போட்டியிட முயற்சி எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், வெற்றிபெற்ற கன்னியாகுமரியில் நாங்குநேரியை விட பலமடங்கு சாதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
0 Comments