உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று (புதன்கிழமை) ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்கிறது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதாவது நாகர்கோவில், தக்கலை, குளச்சல், குழித்துறை, மார்த்தாண்டம், கன்னியாகுமரி போன்ற முக்கிய நகரப்பகுதிகள் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளின் முக்கிய சந்திப்புகள், கடைவீதிகள், முக்கிய கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் அமைந்துள்ள பகுதிகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நேற்று இரவு முதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாகர்கோவில் நாகராஜா கோவிலிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் இருசக்கர வாகன ரோந்து போலீசாரும், நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசாரும் இன்று நாள் முழுவதும் ரோந்துப் பணியில் ஈடுபடுகிறார்கள். கடற்கரை கிராமப்பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் 700 போலீசார் இந்த பாதுகாப்பு பணியை மேற்கொள்ள இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments