குமரியில் கடல் சீற்றம் எதிரொலியாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

குமரியில் கடல் சீற்றம் எதிரொலியாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

in News / Local

கன்னியாகுமரியில் நேற்று அதிகாலையில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். ஆனால், மழை மேகங்கள் திரண்டு இருந்ததால் சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர், அவர்கள் முக்கடல் சங்கம கடற்கரையில் ஆனந்த குளியல் போட்டனர்.

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘வாயு‘ என பெயரிடப்பட்டுள்ளது. புயல் உருவாகியதை தொடர்ந்து கன்னியாகுமரியிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. விவேகானந்தர் மண்டபத்துக்கு வழக்கம் போல் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் படகில் சென்று பார்த்து ரசித்து வந்தனர். ஆனால், சீற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை.

இந்தநிலையில் காலை 10.30 மணிக்கு சீற்றம் காரணமாக 10 முதல் 15 அடி உயர ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி ஆவேசத்துடன் வந்து பாறைகளிலும், கரையில் உள்ள தடுப்பு சுவர் மீதும் மோதியது. இதனால், அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் சுற்றுலா போலீசார் அங்கு விரைந்து சென்று கடலில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை உடனே வெளியேறும்படி கூறினார்கள். மேலும், கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர்.

ராட்சத அலையின் காரணமாக காலை 11 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மேலும், படகுத்துறைக்கு செல்லும் நுழைவாயிலில் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. இதற்கிடையே ஏற்கனவே விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று இருந்த 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அவசரமாக படகில் கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி, வாவத்துறை, ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், கோவளம், கீழ மணக்குடி உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த வள்ளம், கட்டுமர மீனவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடிக்க செல்லவில்லை.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top