குந்தன்கோடு அருகே கொல்லமாவடி பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 43). இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரி செய்து ஆவார். குமரேசன் தற்போது, நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் குமரி கார்டன் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குமரேசன், தனது மனைவியை கொல்லமாவடியில் உள்ள தனது பூர்வீக வீட்டில் விட்டு விட்டு வந்தார். பின்னர், குமரி கார்டன் வீட்டை பூட்டி விட்டு மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.
நேற்று காலை வீடு திரும்பிய அவர் , வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பொருட்கள் அனைத்தும் அங்கங்கே சிதறி கிடந்தன. மேலும், படுக்கை அறை பீரோவில் இருந்த 20 பவுன் நகையும் கொள்ளை போயிருந்தது.
இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
விசாரணையில், குமரேசன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் கதவை உடைத்து அங்கு இருந்த சாவி மூலம் பீரோவை திறந்து நகையை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
0 Comments