அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலைய காவலர்கள், தமிழர் விடுதலை படையை சேர்ந்தவர்களால் தாக்கப்பட்ட வழக்கில், 22 ஆண்டுகளுக்கு பிறகு நீதிபதி P.செந்தூரபாண்டி அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த 1997ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி நள்ளிரவு, அரியலூர் மாவட்ட ஆண்டிமடம் காவல் நிலையத்தில், தமிழர் விடுதலை படையை சேர்ந்த 15 நபர்கள் பைப் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், வீச்சரிவாள் முதலிய ஆயுதங்களுடன் காவலர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதை தொடர்ந்து, காவல் நிலையத்தில் இருந்த 5 பெரிய துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள், தொலை தொடர்பு கருவிகள், போலீஸ் உடைகள், தோட்டாக்கள் போன்றவற்றை கொள்ளை அடித்துச் சென்றனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட, சுந்தரம், ரேடியோ வெங்கடேசன், ரவிச்சந்திரன், முருகையன், சுந்தரமூர்த்தி, ஜெயச்சந்திரன், சேகர், சரவணன், நாகராஜன், செங்குட்டுவன் என்கிற மாறன், ஜான் பீட்டர், உத்திரபதி, பொன்னிவளவன், நடராஜன், வீரையா ஆகியோர் மீது பெரம்பலூர் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கைது செய்தனர்.
இதற்கான வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டுகள் வழக்கு சிறப்பு நீதிமன்றதில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, இந்த வழக்கிற்காக அரசு தரப்பில், 72 சாட்சிகள் விசாரிக்கபட்டு, 101 ஆவணங்களும், 67 சான்று பொருட்களும் குறியீடு செய்யப்பட்டன.
இதனிடையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தமிழர் விடுதலை படையை சேர்ந்த வீரையா என்பவர் அப்ரூவராக மாறிவிட்ட நிலையில், சுந்தரம், சரவணன், உத்திரபதி ஆகிய 3 பேரும் உயிரிழந்துவிட்டனர்.
இதை தொடர்ந்து, அனைத்து சாட்சிகளும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், நேற்று அவ்வழக்கில் மீதமுள்ள 11 பேருக்கும் தலா 10ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க நீதிபதி பி.செந்தூரபாண்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
0 Comments