குமரி மாவட்டம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் பரவி வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இளம் வயது பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 23 பேருக்கு பன்றிக்காய்ச்சலுக்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் உள் நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களுக்கு ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் தனிவார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாகர்கோவில் சற்குணவீதி பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியை திரேசா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானார். குமரி மாவட்டத்தில் இதுவரை சுமார் 50 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தக்கலை அருகே பருத்திவிளையைச் சேர்ந்தவர் வினோத் என்பவரது மனைவி சுகன்யா 7 மாத கர்ப்பிணியான இவர் திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். முதலில் அவரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்தபோது சுகன்யாவுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
அதன்பின் மேல்சிகிச்சைக்காக அவரை உறவினர்கள் திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுகன்யா இன்று காலை இறந்தார். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சாதாரண காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கையும் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து உள்ளது.
0 Comments