நாகர்கோயில் நகரின் சாலைகள் மிகவும் குறுகலானவை. அசுர வேகத்தில் பெருகி வரும் வாகனங்களின் படையெடுப்பால் சாலையில் நடந்து செல்வதே மிகவும் கடினம். இந்த சூழ்நிலையில் நாகர்கோயில் நகராட்சியின் வாழ்நாள் சாதனையான நாகர்கோயிலின் சாலைகள் பாழாய்ப்போன பாதாள சாக்கடை திட்டத்தின் மூலமாக தோண்டப்பட்டு, சரியாக மூடப்படாமல், வாய்பிளந்த நிலையில் உள்ளது.
விண்கல் விழுந்தாற்போலக் காட்சியளிக்கும் இந்தச் சாலைகளின் பள்ளத்தில் வீழ்ந்து உயிர் நீத்தோர் பலர். இதற்கு நாகர்கோயில் நகரில் மைய பகுதியான மணிமேடை அருகிலுள்ள S.P office சாலையும் விதிவிலக்கல்ல... இதை 'சாலை' என்று சொல்வதைவிட 'சாக்கடை' என்று சொல்வதே சாலச் சிறந்தது. மேலும் இந்த சாலையில் பொதுமக்கள் ஒருவித பயம் கலந்த உணர்வோடுதான் பயணம் செய்கிறார்கள். மழைக்காலங்களில் இன்னும் மோசமாக ஆபத்தான நிலையில்தான் இந்தச் சாலையில் பயணிக்க வேண்டியிருக்கிறது.
அடிக்கடி இந்த சாலையில் பயணிப்பவர்கள் வாகனங்களில் இருந்து கீழே விழுந்து, கை கால் முறிவு ஏற்படுகிறது. இதனை அறிந்தும் நகராட்சியில் சாலையை சீரமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமேசான் காடுகளில் கூட எளிதாக பயணிக்கலாம், நாகர்கோயில் நகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் பயணிப்பது பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகளுக்கும் பெரும் சவாலாக இருக்கிறது.
ஒரு மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்திருக்கும் சாலையே இந்த லட்சணத்தில் இருக்கிறதென்றால் ,பொதுமக்கள் பயன்படுத்தும் மற்ற சாலைகளின் கதி ? அதிகமாக உயிர் பலிகள் நிகழும் முன்பு இந்த சாலைகளை முறையாகச் சீரமைக்க நாகர்கோயில் நகராட்சி உடனே நடவடிக்கை எடுக்குமா ? என்பதே பொதுமக்களின் முதல் கேள்வியாக இருக்கிறது.
0 Comments