குமரி மாவட்டத்தில் சாலைகளில் விபத்துகளை குறைக்கும் வகையில் வேகத்தடைகள் அமைக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாலையில் வேகத்தடைகள் அமைக்கப்படுகின்றன. விபத்துகளை குறைக்கும் எண்ணத்தில் தான் வேகத்தடைகள் அமைக்கப்படுகின்றன என கருத்தப்பட்டாலும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் வேகத்தடைகளை விரும்புவதில்லை. அதற்கு முக்கிய காரணம் வேகத்தடைகளை முறையாக அமைக்காததே காரணம்.
இந்த நிலையில் சில அதிகாரிகளின் சுயநல போக்கால் அவர்களுக்கு சாதகமான இடங்களில் வேகத்தடை அமைக்க அனுமதி அளிக்கின்றனர்.
குறிப்பாக அரசு பள்ளிகள் அல்லது அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிகளில் வேகத்தடை அமைக்காமல் விட்டுவிட்டு, தனியார் பள்ளிகள் அமைந்திருக்கும் இடங்களில் வேகத்தடை அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த வகையில் கன்னியாகுமரி அருகே நாற்கர சாலையில் இருந்து விவேகானந்த கேந்திரா செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் திடீரென வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை மிக உயரமாக வாகனங்கள் ஏறமுடியாதபடி செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் இந்த வேகத்தடையை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். பைக்கில் பின்னால் இருக்கும் பெண்கள், முதியவர்கள் தூக்கி வீசப்படும் அபாயம் உள்ளது. மேலும் விலை உயர்ந்த சொகுசு கார்களின் அடிப்பகுதி இந்தவேகத்தடையில் தட்டும் நிலையும் உள்ளது.
விபத்தை தடுக்க வேண்டும் என போடப்பட்டுள்ள வேகத்தடையே விபத்துகளுக்கு காரணமாக உள்ளது. எனவே இந்த வேகத்தடையை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இளைஞர்கள் அதிக வேகமாக பைக்கில் செல்லும் பல சாலைகள் உள்ளன. அந்த சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், அதிகாரிகள் அதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் இந்த சாலையில் தனியார் பள்ளிக்கு சாதகமாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக இந்த வேகத்தடையை அகற்ற வேண்டும். தவறு செய்தவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
0 Comments