கன்னியாகுமரி அருகே ஆபாச படங்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்த காண்டிராக்டர் கைது!

கன்னியாகுமரி அருகே ஆபாச படங்களை வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்த காண்டிராக்டர் கைது!

in News / Local

பாலியல் குற்றங்களும், சிறுவர்கள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களும் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இணையதளத்தில் ஆபாச படங்கள் பார்ப்பதுதான் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஏராளமான ஆபாச இணையதளங்கள் உடனடியாக தடை செய்யப்பட்டன. அதுமட்டுமில்லாமல், ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்பவர்கள், சமூக வலைதளங்களில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்பவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று அரசு உத்தரவிட்டது.

அதன்படி ஆபாச படங்களை பார்ப்பவர்கள், பதிவேற்றம் செய்பவர்கள், பதிவிறக்கம் செய்யபவர்கள், மற்றவர்களுடன் பகிர்பவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்தவர் முத்துராஜ்(வயது 49), கட்டிட காண்டிராக்டர். இவருடைய மகன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். மேலும், கொட்டாரத்தில் உள்ள டியூசன் சென்டரில் சேர்ந்துள்ளான்.

அங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை ஒருங்கிணைத்து ஒரு வாட்ஸ்-அப் குரூப் வைத்துள்ளனர். இதில் மாணவர்களின் வருகை, படிப்பு விவரம் உள்ளிட்டவற்றை டியூசன் சென்டர் நிர்வாகத்தினர் பகிர்ந்து வருகின்றனர். முத்துராஜூம் அந்த குரூப்பில் உள்ளார். முத்துராஜூக்கு ஆபாச படம் பார்க்கும் பழக்கம் உண்டு. இவர் பார்க்கும் படங்களை அவ்வப்போது தனது நண்பர்களுடன் பகிர்ந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் சமீபத்தில் முத்துராஜ் ஆபாச படங்களை தனது நண்பர்களுடன் பகிரும் போது, டியூசன் சென்டர் குரூப்பிலும் தவறுதலாக பகிர்ந்துள்ளார். இதைகண்ட மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக டியூசன் சென்டர் உரிமையாளரை தொடர்பு கொண்டு கடுமையாக கண்டித்தனர்.

இதையடுத்து டியூசன் சென்டர் உரிமையாளர் செல்வகுமார் இதுபற்றி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து விசாரணை நடத்தி சட்டவிரோதமாக தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச படங்களை பகிர்ந்த குற்றத்தின்கீழ் முத்துராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

ஆபாச படங்களை வாட்ஸ்-அப்பில் பகிர்ந்ததால் காண்டிராக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top