போலி ஃபேஸ்புக் ஐடி யில் பெண்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த சைக்கோ அதிகாரி கைது!

போலி ஃபேஸ்புக் ஐடி யில் பெண்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த சைக்கோ அதிகாரி கைது!

in News / Local

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கைஸ் முகமது (27). மாஸ்டர் ஆஃப் பப்ளிக் ஹெல்த் படித்த இவர், சென்னையில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் திட்ட அலுவலராக வேலை பார்த்துவந்தார். இந்தநிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில், கைஸ் முகமது மீது பெண் ஒருவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் விஜயராகவன் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``அம்பத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கைஸ் முகமது மீது புகார் கொடுத்தார். அந்தப் புகாரை விசாரித்தபோதுதான் அவரின் இன்னொரு முகம் தெரிந்தது. பள்ளிப் படிப்பை காஞ்சிபுரத்தில் முடித்த முகமது, கல்லூரிப் படிப்பை பிரபலமான கல்லூரி ஒன்றில் நிறைவு செய்தார். அப்போது அவருக்கும் உடன் படித்த பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. படிப்பை முடித்த இருவரும் வேலைக்குச் சென்றுள்ளனர். வேலைக்காக சென்னையில் அறை எடுத்து தங்கியிருந்தார் முகமது. தற்போது பிரபலமான மருத்துவமனையில் திட்ட அலுவலராக வேலை பார்த்து வருகிறார். கைநிறைய சம்பளம், தனக்குக்கீழ் ஊழியர்கள் என முகமதுவின் வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்தது.

மருத்துவமனையில் பொறுப்பான அதிகாரி என்ற பெயர் முகமதுவுக்கு இருந்தது. ஆனால், அவருக்குள் அந்நியன் ஒருவன் அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டிருந்ததை யாரும் கண்டுபிடிக்கவில்லை. சென்னை திருவல்லிக்கேணியில் குடியிருந்த முகமது, தன்னுடைய காதலியுடன் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார் . அப்போது காதலியின் தோழியுடன் முகமதிற்கு பழக்கம் ஏற்பட்டது. காதலியின் தோழிக்குத் தெரியாமல் அவருடைய புகைப்படங்களை செல்போனில் எடுத்திருக்கிறார் முகமது.

பிறகு அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்தத் தகவல் சம்பந்தப்பட்ட பெண்ணுக்குக்கூட தெரியாமல் பார்த்துக்கொண்டார். அடுத்து காதலியின் நிர்வாணப் புகைப்படங்களையும் செல்போனில் எடுத்துள்ளார். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் மருத்துவமனையில் பணியாற்றும் பெண்களை ஆபாசமாகப் படம் எடுத்த முகமது அதையும் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, கமென்ட்ஸ்களை ரசித்துள்ளார். அந்தப் புகைப்படங்களின்கீழ் ஆபாசமான கமென்ட்டுகளையும் முகமது பதிவு செய்துள்ளார். முகமதால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், அம்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் உதவி கேட்டுள்ளார்.

இதையடுத்துதான் இருவரும் இணைந்து போலீஸ் உயரதிகாரி ஒருவரைச் சந்தித்து புகார் கொடுத்தனர். இந்தத் தகவல் தெரிந்த முகமது, உதவி செய்த பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். முகமதின் செல்போனை ஆய்வு செய்த போது அதில் ஏராளமான பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தன. அதோடு அவரின் போலி ஃபேஸ்புக் ஐடியை ஆய்வு செய்தபோது தன்னுடைய குடும்பத்தினரின் ஆபாசப் புகைப்படங்களையும் பதிவு செய்து அதற்குக்கீழே கமென்டுகளைப் போட்டுள்ளார். இந்தளவுக்கு செக்ஸ் சைக்கோவாக இருக்கும் முகமது மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளோம்" என்றார்.

முகமதின் சுயரூபத்தைத் தெரிந்த அவரின் குடும்பத்தினரும், அவரால் பாதிக்கப்பட்ட பெண்களும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர். தங்களின் புகைப்படங்கள் வெளியில் வராமல் இருக்க போலீஸாரின் உதவியை அவர்கள் நாடியுள்ளனர். இதையடுத்து, உடனடியாக முகமதுவின் ஃபேஸ்புக் ஐடியை போலீஸார் லாக் செய்துள்ளனர். மேலும், முகமது தொடர்பான தகவல்களையும் போலீஸார் சேகரித்துவருகின்றனர்.

சிறையில் அடைக்கப்பட்ட முகமதிடம் , `ஏன் இப்படிச் செய்தாய்?' என்று போலீஸார் கேட்டதற்கு, `பெண்களைப் பார்த்தாலேயே என்னையே மறந்து இப்படிச் செய்துவிடுகிறேன். சில சமயத்தில் என்னைக் கட்டுப்படுத்த முடிவதில்லை' என்று கூறியுள்ளார்.

முகமது பணியாற்றும் ஆஸ்பத்திரியில் அவர் குறித்து போலீஸார் விசாரித்தபோது, ``அவரா இப்படி செய்தார் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. எங்களிடம் அன்பாகப் பழகுவார், பொறுப்பான ஆபீஸர்" எனப் பதில் அளித்துள்ளனர்.

பிறகு முகமதின் செல்போன்களில் உள்ள புகைப்படங்களை காண்பித்தபோது, அதில் உள்ள படங்களைப் பார்த்து அந்தப் பெண்களில் சிலர் அதிர்ச்சியடைந்தனர். முகமது பயன்படுத்திய ஃபேஸ்புக் ஐடி, போலியான தகவல்கள் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. `அந்த விவகாரத்தில் முன்னெச்சரிக்கையாக இருந்த முகமது, படங்களை மட்டும் தன்னுடைய செல்போன் மூலம் சமூகவலைதளத்தில் பதிவு செய்ததால் சிக்கிக் கொண்டுள்ளார்' என்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.

இதுகுறித்து உளவியல் நிபுணர் சித்ரா அரவிந்திடம் கேட்டோம். ``முகமதின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கேஸ் ஹிஸ்ட்ரியைப் பார்த்தால் அவருக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கான காரணம் தெரிந்துவிடும். செக்ஸ் விஷயத்தில் முகமது இந்தளவுக்கு அடிமையாக இருந்ததற்கு நிச்சயம் எதாவது ஒரு காரணம் இருக்கும். இது ஒருவகையான மனநலப் பாதிப்பின் வெளிப்பாடுதான். அதற்குரிய கவுன்சலிங்கை அவருக்கு அளித்திருந்தால் அவர் இந்தளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார். அவர் செய்த தவறுக்கு தண்டனை மட்டும் அளித்தால் போதாது. அவருக்கு சைக்கோதெரபி (Voyeurism) அளிக்கப்பட்டால் பாதிப்பிலிருந்தும் அவர் மீள்வார். முகமதுவைக் கண்டுகொள்ளாமல் விட்டால் அவரின் நிலைமை இதைவிட மோசமாகிவிடும்" என்றார் உறுதியாக.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top