தக்கலையில் 75 ஏ.டி.எம். கார்டுகளுடன் சுற்றி திரிந்த நபர் கைது!

தக்கலையில் 75 ஏ.டி.எம். கார்டுகளுடன் சுற்றி திரிந்த நபர் கைது!

in News / Local

குமரி மாவட்டம் தக்கலை காந்திநகரை சேர்ந்தவர் சுரேஷ். குழித்துறையில் ரெயில்வே என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தக்கலை தொலைபேசி நிலையம் அருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது, அவரது கையில் இருந்த ரூ.2 ஆயிரம் தொலைந்து விட்டது. சுற்றுப்பகுதியில் பணத்தை தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கடை ஒன்றில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, சுரேஷ் தொலைத்த ரூ.2 ஆயிரத்தை ஒருவர் எடுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து சுரேஷ் தனது உறவினர் அய்யப்பனுடன் அந்த நபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது, அந்த நபர் புலியூர்குறிச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருப்பதை கண்டு அவரை சுற்றி வளைத்தனர். அவரிடம் தொலைந்த ரூ.2 ஆயிரம் குறித்து கேட்டனர். அப்போது, அவர் ரூ.2 ஆயிரத்தில் ரூ.150-க்கு சாப்பிட்டுவிட்டு மீதி ரூபாயை வைத்திருந்தார். மேலும், அந்த நபர் சுரேசையும், அய்யப்பனையும் மிரட்டி தாக்க முயன்றார்.

இதையடுத்து அய்யப்பன் தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த நபரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது, அவரிடம் 75 ஏ.டி.எம். கார்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அந்த நபரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காமராஜர் நகரை சேர்ந்த மதுசூதனன் (வயது 45) என்பதும், இவர் குமரி மாவட்டத்தில் சுற்றி திரிந்து கோவில் விழாக்கள், வணிக வளாகங்களில் திருட்டு, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மதுசூதனனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த ஏ.டி.எம். கார்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

மேலும், கைப்பற்றப்பட்ட ஏ.டி.எம். கார்டுகளை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி அவை யாருடையவை என விசாரணை நடத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வங்கிகளில் இருந்து முழுமையாக தகவல்கள் பெற்ற பின்புதான், கைப்பற்றப்பட்ட ஏ.டி.எம். கார்டுகள் குறித்த விவரங்கள் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும், ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மதுசூதனை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். மதுசூதனனுக்கும், குமரி மாவட்டத்தில் உள்ள கொள்ளையர்களுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதனால் தக்கலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top