பூதப்பாண்டியை அடுத்த இறச்சகுளத்தை சேர்ந்தவர் நாகராஜன், வயது 45. பெயிண்டர். வேலை பார்த்து வந்த இவர் நேற்று அதிகாலையில் தனது வீட்டின் மாடியில் தேங்கி நின்ற மழைநீரை வெளியேற்ற சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மொட்டை மாடியின் அருகே சென்ற உயர்மின் அழுத்த கம்பியை தொட்டதில் மின்சாரம் தாக்கி, தூக்கி வீசப்பட்டார். இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த நாகராஜனுக்கு முத்து என்ற மனைவியும், கபிலா ஸ்ரீ என்ற மகளும், மஜித் என்ற மகனும் உள்ளனர். நடந்த சம்பவம் பற்றி பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments