போக்குவரத்து விதிகளை மீறினால் பல மடங்கு அபராதம் விதிக்கும் வகையிலான திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் நாடு முழுவதும் கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்திய முழுவதும் இந்த திருத்தப்பட்ட வாகன சட்டம் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் விதிமுறையை மீறி வாகனம் ஓட்டிய ஒரு வாலிபருக்கு ரூ.11 ஆயிரத்து 500 அபராதம் விதித்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நித்திரவிளை இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையிலான போலீசார் பாலாமடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சின்னத்துறை ஜூட்ஸ் காலனி பகுதியை சேர்ந்த கிசான் ஜாண் (வயது 27) என்பவரின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் அவர் ஹெல்மெட் அணியாமலும், மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. மேலும், வாகன பதிவெண் விதிமுறைக்கு மாறாக அலங்கார வடிவிலான எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கிசான் ஜாணுக்கு போதையில் வாகனம் ஓட்டியதற்கு ரூ.10 ஆயிரம், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்கு ரூ.1000, வாகன பதிவெண் பலகையில் அலங்கார வடிவிலான எழுத்தில் எழுதியதற்கு ரூ.500 என மொத்தம் ரூ.11 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மோட்டார் வாகன சட்டம் திருத்தப்பட்ட பிறகு குமரி மாவட்டத்தில் முதன்முறையாக போக்குவரத்து விதிமுறையை மீறியதாக கிசான் ஜாணுக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 Comments