மது குடிப்பதை கண்டித்த வாலிபருக்கு கத்திக்குத்து!

மது குடிப்பதை கண்டித்த வாலிபருக்கு கத்திக்குத்து!

in News / Local

குமரி மாவட்டம் குளச்சல் அருகே கோணங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் சேவியர். இவரது மகன் விபின் தேவா (26). சென்னையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ஜேக்கப் சேவியர் வீட்டின் முன்பு உள்ள சாலையில் இருந்து அந்த பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் மது அருந்திவிட்டு, தகாத வார்த்தையால் திட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இது தொடர்பாக அந்த வாலிபர்களுக்கும், ஜேக்கப் சேவியர் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் வேலைபார்த்து வரும் விபின் தேவா விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார். அதே பகுதியை சேர்ந்த விஜின், பெபின், சேகர், நிசாந்த், அருள் ஆகியோர் மது குடிப்பது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் சம்பந்தமாக பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று விபின் தேவாவை அழைத்துள்ளனர். அவர் வீட்டைவிட்டு வெளியே சென்று அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த விஜின் மறைத்து வைத்திருந்த கத்தியால் விபின் தேவாவை குத்தினார். மேலும், மற்றவர்கள் கட்டையால் தாக்கியதுடன், மதுகுடிப்பதை தடுத்தால், குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த விபின் தேவா குளச்சலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top