சென்னையில் சாலையோரங்களில் தங்கியிருந்து வீடு மற்றும் கடைகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அடையாறு பகுதியில் குமரன் என்பவர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஸ்டோர் வைத்துள்ளார். இதன் ஷட்டர் உடைக்கப்பட்டு அங்கிருந்து 5 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டது. 3 ஆம் தேதி நிகழ்ந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதே போல் திருவான்மியூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுபோன்ற தொடர் கொள்ளைகள் அரங்கேறி வருவதால், தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அங்குள்ள 150 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இந்த கொள்ளையில் ஈடுப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் (23) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். பின்னர், இவரிடம் நடத்திய விசாரணையில், இவரின் பெற்றோர் இறந்து விட்டதால் பிளாட்பாரத்தில் தங்கி இருந்து, கடை மற்றும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது தெரியவந்தது. மேலும் கொள்ளையடித்த பணத்தில் உல்லாசமாக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து கொள்ளையடித்த பணம் மற்றும் நகையை இவரிடமிருந்து பறிமுதல் செய்த போலீசார் இவரை சிறையில் அடைத்தனர்.
0 Comments