நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை குத்திக்கொன்ற கணவர்!

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை குத்திக்கொன்ற கணவர்!

in News / Local

சென்னையை அடுத்த புழல் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவீரன்(வயது 48). இவர், பாடியில் உள்ள ஒரு தனியார் அச்சகத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் கோவையைச் சேர்ந்த சஜினி(39) என்பவருக்கும் திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு மணிமொழி(19), சிந்துஜா(17) என 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிவீரன், மனைவி சஜினியின் நடத்தையில் சந்தேகப்பட்டதாக தெரிகிறது. அதன்பிறகு கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் சஜினி, கணவரை விட்டு பிரிந்து கோவையில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். வெற்றிவீரன், தனது 2 மகள்களுடன் இங்கு வசித்து வந்தார். மகள்கள் இருவரும் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு வெற்றிவீரன், கோவைக்கு சென்று, “இனிமேல் தகராறு செய்யமாட்டேன். நமது மகள்களின் எதிர்காலம் பாழாகிவிடும். அதனால் என்னுடன் குடும்பம் நடத்த வா ” என்று கூறி மனைவியை தன்னுடன் வரும்படி அழைத்தார்.

இதனை நம்பி சஜினியும், கணவர் வெற்றிவீரனுடன் புறப்பட்டு வந்தார். புழலில் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். மகள்கள் இருவரும் திருப்போரூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வெற்றிவீரன், சஜினியிடம் தகராறு செய்தார். இருவருக்கும் தகராறு முற்றி,போகவே அதிகாலை 5 மணிவரையில் அந்த தகராறு நீடித்தது.

இதில் ஆத்திரம் அடைந்த வெற்றிவீரன், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்துவந்து மனைவி சஜினியின் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சஜினி, ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத வெற்றிவீரன், சஜினியின் வயிற்றிலும் கத்தியால் குத்திக்கிழித்தார். இதில் குடல் சரிந்து, சம்பவ இடத்திலேயே சஜினி பரிதாபமாக இறந்தார்.

பின்னர் வெற்றிவீரன், புழல் போலீஸ் நிலையம் சென்று, தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்தார். புழல் இன்ஸ்பெக்டர் தங்கதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சஜினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், வெற்றிவீரனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top