மணக்குடி லூர்து மாதா தெருவை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 35). மீன்பிடி தொழிலாளியான இவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்குள்ள குருசடி பகுதியில் இரவு தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கிதியோன் வின்சென்ட் மனைவி முகத்தில் டார்ச்லைட் அடித்ததால், இதனை வின்சென்ட் தட்டிக் கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த கிதியோன் உள்ளிட்ட சிலர் வின்சென்டை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி வின்சென்ட் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகுதான் வின்சென்ட் உடலை வாங்கி மணக்குடிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். இதற்கிடையே கொலை சம்பவத்தில் தொடர்புடைய கிதியோன் ஆற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்ய சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சித்தார்த் சங்கர்ராய், சப்-இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கிதியோன், ஜஸ்டின், லாடஸ், ஆண்டனி, அகில், நிகில், அஸ்வின் ஆகியோர் நாகர்கோவிலில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து கொலையில் ஈடுபட்ட கிதியோன் மற்றும் அவனது 6 கூட்டாளிகளையும் கைது செய்தனர்.
0 Comments