தக்கலை அருகே பயங்கரம் கள்ளக்காதலை கண்டித்த கொத்தனார் படுகொலை!

தக்கலை அருகே பயங்கரம் கள்ளக்காதலை கண்டித்த கொத்தனார் படுகொலை!

in News / Local

குமரி மாவட்டம் பூந்தோப்பு தாணுவிளாகத்து விளை பகுதியை சேர்ந்தவர் தங்கமணி மகன் விஜயராஜன் (வயது 40). கொத்தனாரான இவருக்கு திருமணமாகவில்லை. தந்தையுடன் வீட்டில் வசித்து வந்தார். நேற்றுமுன்தினம் மாலையில் இவர் வேலைக்கு சென்று விட்டு சுவாமியார்மடம் பகுதியில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கினார்.

பின்னர் அங்கிருந்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். தக்கலை அருகே காட்டாத்துறை கால்நடை ஆஸ்பத்திரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது திடீரென 2 பேர் அவரை வழிமறித்தனர்.

வந்த வேகத்தில் இரும்பு கம்பியால் அவரை சரமாரியாக தாக்கினர். விஜயராஜன் சுதாரிப்பதற்குள் இருவரும் தாக்கியதால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தலை உள்ளிட்ட பல இடங்களில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார். இந்த திடீர் தாக்குதலை கண்ட அந்த பகுதியில் நின்றவர்கள் பதற்றத்துடன் ஓடி வந்து, கொலை வெறியில் ஈடுபட்ட 2 பேரையும் தடுத்தனர். ஆனாலும் அவர்கள் விஜயராஜனை விடவில்லை. தொடர்ந்து தாக்கியதால் அவருடைய உடலில் இருந்து ரத்தம் கொட்டியது.

மேலும் பொதுமக்கள் அங்கு திரண்டு தாக்குதல் நடத்தியவர்களை தொடர்ந்து கட்டுப்படுத்த முயற்சித்தனர். அந்த சமயத்தில் அவர்களிடம் இருந்து தப்பிய விஜயராஜன் நடையும், ஓட்டமுமாக வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்தபடி தனது இளைய சகோதரி விஜய கவிதாவை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறி வீட்டுக்கு வருமாறு கூப்பிட்டுள்ளார்.

பதற்றத்துடன் வீட்டுக்கு வந்த அவர், அண்ணன் விஜயராஜன் படுகாயமடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் துடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே ஆட்டோவில் அண்ணனை ஏற்றிக் கொண்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சையில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து உடல்நிலை மோசமாக இருந்ததால் விஜயராஜன் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை போலீசார் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, விஜயராஜனின் சகோதரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, காட்டாத்துறை நாராவிளை பகுதியை சேர்ந்த டார்வின் (30), அஸ்வின் (22) ஆகியோர் எனது அண்ணன் விஜயராஜனை தாக்கியுள்ளனர். இந்த தகவலை எனது அண்ணன் தெரிவித்ததாக அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர். இதற்கிடையே அன்றைய தினம் இரவு சிகிச்சை பலனின்றி விஜயராஜன் பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றினர். மேலும், விஜயராஜனை இரும்பு கம்பியால் தாக்கிய 2 பேரையும் பிடிக்க துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் காட்டாத்துறை பகுதியில் பதுங்கி இருந்த டார்வினை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், கள்ளக்காதலை கண்டித்ததால் விஜயராஜனை தீர்த்துக் கட்டியதாக டார்வின் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். டார்வின் பர்னிச்சர் கடை நடத்தி வந்துள்ளார். மேலும் இந்த கொலையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

டார்வினுக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமான 25 வயது பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. பெண்ணின் கணவருக்கு 40 வயது ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் மனைவியின் கள்ளக்காதல் அவருக்கு தெரிய வந்ததால் மிகவும் மனமுடைந்தார். மனைவியை கண்டித்ததால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு உருவானது.

அதே சமயத்தில், மனைவி நடத்தை குறித்து அவர் தன்னுடைய நண்பரான விஜயராஜனிடம் தெரிவித்ததோடு கதறி அழுதுள்ளார். தொடர்ந்து விஜயராஜன், டார்வினை சந்தித்து கள்ளக்காதலை கண்டித்ததோடு, அவருக்கு எச்சரிக்கையும் விடுத்தார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே முன்விரோதத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே கள்ளக்காதல் விவகாரத்தில் அந்த பெண், கணவரை விட்டு பிரிந்து சென்றார்.

இவ்வாறாக கடந்த ஒரு வருடமாக கள்ளக்காதலால் பிரச்சினை நீண்டு கொண்டே சென்றது. இது டார்வினுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியதோடு, இந்த சம்பவத்திற்கு விஜயராஜன் தான் காரணம் என நினைத்து அவரை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி நண்பர் அஸ்வினுடன் சேர்ந்து விஜயராஜனை பட்டப்பகலில் கொடூர தாக்குதல் நடத்தியதில் விஜயராஜன் பரிதாபமாக இறந்தார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான டார்வின் சிக்கியுள்ளார். தப்பி ஓடிய அஸ்வினை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். கள்ளக்காதலை கண்டித்த கொத்தனார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top