கேரளா மாநிலம் கோழிக்கோடு முக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பீர்ஜூ. 53 வயதான இவர், தனது தாய் ஜெயவல்லி வசம் இருந்த நிலத்தை அபகரிக்கத் திட்டமிட்டிருக்கிறார். கடந்த 2014 -ல் 70 வயதான தனது தாய் ஜெயவல்லியைக் கொலை செய்யக் கூலிப்படையை நாடினார். பின்னர், மலப்புரம் இஸ்மாயில் என்பவரிடம் ரூ.10 லட்சம் தருவதாகக் கூறி தாயைக் கொல்லத் திட்டமிட்டிருக்கிறார். இதையடுத்து, ஜெயவல்லியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, தற்கொலை என நாடகமாடி சீலிங் ஃபேனில் தொங்கவிட்டிருக்கிறார்கள்.
இதன்பின்னர் பீர்ஜூ தமிழ்நாடு, நீலகிரி மாவட்டம் பந்தலுார் அருகில் உள்ள புலியாடி என்ற பகுதியில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். தாயைக் கொல்லக் கூலிப்படையாக இருந்த இஸ்மாயிலுக்குப் பணம் பிரித்துக் கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால், கொலை செய்தது குறித்து வெளியில் கூறிவிடுவேன் என இஸ்மாயில் பீர்ஜூவை மிரட்டினார். இதில் ஆத்திரமடைந்த பீர்ஜூ, கடந்த 2017ம் ஆண்டு இஸ்மாயிலை வரவழைத்து உணவும் மதுவும் வழங்கிக் கொலை செய்து உடலை பல துண்டுகளாக்கி, பல்வேறு இடங்களிலும் வீசிச் சென்றார்.
இந்தக் கொடூர சம்பவம் கேரளாவை உறையச் செய்தது. கோழிக்கோடு கிரைம் பிராஞ்ச் ஏ.டி.ஜி.பி.,டோமின் தச்சங்கரி தலைமையிலான போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் புலியாடி பகுதியில் தலைமறைவாக இருந்துவந்த பீர்ஜூவை கேரள மாநில போலீஸார் கடந்தவாரம் கைது செய்தனர். 7 நாள் போலீஸ் காவலில் பீர்ஜூ இருக்கும் நிலையில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. பீர்ஜூவின் தந்தை தற்கொலை விவகாரத்தையும் போலீஸார் தோண்டத் தொடங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து கேரள போலீஸார், கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது உடல் துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் கோழிக்கோடு நகரத்தின் பல இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்டது. இஸ்மாயில் என்பவரை மட்டுமல்ல, தன் தாய் ஜெயவல்லியையும் பிர்ஜூ கொலை செய்துள்ளார். பிர்ஜூவின் தந்தை வாசு 1984-ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கின்றனர். தற்போது, அதிலும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, பீர்ஜூவின் தந்தை தற்கொலை விவகாரத்தையும் தூசி தட்ட தொடங்கியுள்ளோம்.
குடியிருந்த வீட்டின் பத்திரம் தொலைந்ததாக பத்திரிகையில் விளம்பரம் செய்து, பிறகு பதிவு செய்து ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். இவரது மனைவி, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்கின்றனர் குற்றப்பிரிவு போலீஸார்.
0 Comments