ஆரல்வாய்மொழியில் இருந்து பூதப்பாண்டி செல்லும் சாலையில் அவ்வையாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை அடுத்துள்ள மலையில் மா, கொய்யா, காட்டுநெல்லி, முந்திரி போன்ற பல ரகப்பட்ட மரங்கள் உள்ளன. முன்பு வருவாய்துறைக்கு சொந்தமாக இருந்த இந்த மலை தற்போது, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்தநிலையில், நேற்று மதியம் மலைப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ மள.. மள..வென வேகமாக பரவியது. இதில் புல் பூண்டுகள், மரங்கள் கொழுந்துவிட்டு எரிய தொடங்கின. இதில் ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது.
இதுகுறித்து அந்த பகுதியினர் பூதப்பாண்டி வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். பூதப்பாண்டி வனசரகர் வெங்கடாச்சலபூபதி தலைமையில் வன ஊழியர்கள் 40 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் பச்சை இலை, தழைகளை பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். முதற் கட்ட விசாரணையில் மலையின் அடிவாரத்தில் ஒரு குப்பை கிடங்கு உள்ளது. இங்கு நாகர்கோவிலில் உள்ள வணிக வளாகத்தில் இருந்து குப்பைகள் கொட்டுவது வழக்கம். இங்கு ஏற்பட்ட தீ, மலையில் பரவி இருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதே போல் நேற்று மாலை மாம்பழத்துறையாறு அணை அருகே உள்ள மலையிலும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இரவு நேரம் ஆக, ஆக தீ மலையின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடன் இருந்தனர்.
0 Comments